தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் கரையாமல் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகள்.. இரவிலும் தொடரும் தூய்மை பணிகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 10:58 PM IST

Ganesha idols washed ashore at beach: சென்னையில் கடலில் கரைக்கப்பட்டு, கரையாமல் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகளையும், 150 டன் அளவிலான மரக்கட்டை, பூ, இலை போன்ற பொருட்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Ganesha idols washed ashore at beach 150 tonnes of material removal still continue in night
கரையாமல் கரை ஒதுங்கிய பொருட்களை அகற்றும் பணி இரவிலும் தொடர்கிறது

கரையாமல் கரை ஒதுங்கிய பொருட்களை அகற்றும் பணி இரவிலும் தொடர்கிறது

சென்னை: நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் காவல் துறை அனுமதி வழங்கியதன் பெயரில், சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சென்னையில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (செப்.24) ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்தனர். இதில் சென்னை பட்டினப்பாக்கக்த்தில் மட்டும் 1,300 சிலைகள் கரைக்கபட்டன. இதில் 50-க்கும் சிலைகள் கரைக்காமல், மேலும் கடலில் போட்ட சிலைகள் எல்லாம், இன்று கரை ஒதுங்கியது. இதனால் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை குப்பைமேடாக இன்று காலை காட்சியளித்தது.

இதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு, அந்த சிலைகளை அப்புறபடுத்த கூறினார். அதைத் தொடர்ந்து, சென்னையில், உள்ள கடற்கரைகளை உடனடியாக தூய்மை செய்ய வேண்டும் என்று கூறிய நிலையில், தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் சிலைகளை அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று இரவு ஆணையர் மீண்டும் ஆய்வு செய்தார்.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட காசிமேடு, திருவொற்றியூர், பட்டினப்பாக்கம் மற்றும் பாலவாக்கம் ஆகிய கடற்கரை பகுதிகளில் 1,300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்றைய தினத்தில் கரைக்கப்பட்டது.

இவற்றில் கடலில் கரைக்கப்படாமல் ஒதுங்கப்பட்ட 50 பெரிய மற்றும் சிறிய சிலைகளின் உடைந்த பாகங்களை மீண்டும் கடலில் கரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பெரிய சிலைகளை கிரேன் இயந்திரங்கள் மூலம் மீண்டும் கடலில் கரைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளுக்காக ஜே.சி.பி. இயந்திரங்கள், டிப்பர் வாகனங்கள், BOV வாகனங்கள் என மொத்தம் 80 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், சுமார் 150 டன் அளவிலான மரக்கட்டைகள், பூக்கள், வாழை இலைகள், உணவுப் பொருட்கள், பாட்டில்கள் உள்ளிட்ட இதரப் பொருட்கள் கடலில் கரை ஒதுங்கிய காரணத்தினால், அப்பொருட்களை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் காவல் துறையைச் சார்ந்த 315 பணியாளர்கள் மூலம் தொடர்ந்து அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையின்படி, பொதுமக்களிடையே விநாயகர் சிலைகளை எவ்வாறு கரைப்பது என்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கடற்கரைகளில் சிலைகள் கரைக்கப்பட்டது. இவற்றில் பெரும்பாலான சிலைகள் உரிய முறையில் முழுமையாக கரைக்கப்பட்டுள்ளது. சில சிலைகள் மட்டுமே கரை ஒதுங்கியுள்ளது. இவற்றை கரைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கரைபடக்கூடிய சிலைகளின் பாகங்களை கரைக்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரைக்க முடியாத கழிவுகள் மற்றும் இதரப் பொருட்களை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சேவை நோக்குடன் இயங்கும் அரசு பேருந்துகளுக்கு சுங்கக்கட்டணம் கூடாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

ABOUT THE AUTHOR

...view details