சென்னை:விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (ஆக-31) விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தி அன்று தெரு முனைகளில் பல வகையான சிலைகள் வைத்து வழிபடுவது, அதே போன்று வீட்டில் களி மண்ணால் செய்யப்பட்ட சின்ன பிள்ளையார் வைத்து கொழுக்கட்டை, சுண்டல், ஆப்பிள், சாத்துக்குடி வைத்து தெய்வ வழிபாடு செய்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரோனா தொற்று காரணமாக தெருமுனைகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபட அரசு தடை விதித்தது.
இதனால், வீட்டிலேயே சிறிய களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வழிபாடு செய்து அருகில் உள்ள கிணற்றிலோ அல்லது நீர்நிலைகளிலோ மக்கள் கரைத்தனர். தற்போது கரோனா தொற்று குறைந்து வருவதால், இந்த ஆண்டு முதல் தெருமுனைகளில் விநாயகர் சிலையினை வைத்து வழிபட அரசு அனுமதி வழங்கியது.
சென்னை வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், தியாகராய நகர் உள்ளிட்டப்பகுதிகளில் அதிகாலையில் விநாயகர் சிலைக்கு மகா ஹோமம் செய்து வழிபாடு செய்தனர். தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 1.25 லட்சம் சிலைகளும் சென்னையில் 5ஆயிரத்து 200 சிலைகளும் வைப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.