தமிழ்நாடு

tamil nadu

மழை வெள்ள பாதிப்பால் சான்றிதழ் சேதமா? தென்மாவட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 7:53 PM IST

Certificates copy: மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் இணையதளம் வாயிலாக சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Certificates copy
தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டின் மாவட்டங்களின் பல பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், மிக்ஜாம்புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பினால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு ஏதுவாக www.mycertificates.in என்ற இணையதளம் உயர் கல்வித்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களும், தாங்கள் இழந்த சான்றிதழ்களின் நகல்களைப் பெற, அச்சான்றிதழ்கள் பற்றிய விவரங்களை மேற்கண்ட இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக சான்றிதழ்களின் விவரங்களைப் பதிவு செய்தபின், அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை (Acknowledgement) அனுப்பப்படும்.

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திடமிருந்து பெறப்பட்டு, மாணவ, மாணவியர்களுக்கு, அவர்கள் எந்த மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தார்களோ, அதே மாவட்டத்திலேயே அவர்களுக்கு வழங்கப்படும். அதாவது, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்திலேயே வழங்கப்படும்.

மேலும், இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுபெற, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், “மிக்ஜாம்” புயல் காரணமாகவும், தற்போது தென்மாவட்டங்களில் கனமழை காரணமாகவும், மதிப்பெண் சான்றிதழ்களை (10,+1 மற்றும் +2) இழந்த அல்லது சேதமடைந்த மாணவர்கள் நலன் கருதி, மாணவர்கள் தங்களது சான்றிதழ்களின் நகல்களை (Duplicate Certificate) எவ்வித கட்டணமின்றி அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிடப்பட்ட விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, தாங்கள் பயின்ற பள்ளித் தலைமை ஆசிரியர் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, கனமழையில் மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவியர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே உரிய விண்ணப்பத்தினை சமர்ப்பித்து கட்டணமில்லாமல், தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

இதையும் படிங்க:மத்திய அரசு தென் மாவட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details