தமிழ்நாடு

tamil nadu

போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

By

Published : Dec 13, 2020, 4:05 PM IST

போலி கால் சென்டர் நடத்தி லோன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கைவிலங்கு
கைவிலங்கு

சென்னை: வேளச்சேரியை சேர்ந்த கணேஷ் சங்கர் என்பவருக்கு லோன் தருவதாக ஆசை காட்டி பண மோசடியில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சில மாதங்களுக்கு முன்னர் கணேஷின் செல்ஃபோனுக்கு வந்த ஒரு அழைப்பில் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி பேசியுள்ளனர். பணம் தேவைப்பட்டால் ஆவணங்களை சமர்ப்பித்து கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என ஆசைக்காட்டியுள்ளனர். கணேஷுக்கு பொருளாதார ரீதியாக சில சிக்கல்கள் இருந்ததால் அவரும் ஒத்துக்கொண்டுள்ளார்.

அந்த அழைப்பில் பேசிய நபர், தொகையை கையில் பெறுவதற்கு முன்பாக, அந்த கடன் தொகையில் 10% செலுத்தி நிறுவனத்தில் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய கணேஷ் சங்கர் தனக்கு நான்கு லட்ச ரூபாய் வேண்டும் என கூறியுள்ளார். தொலைபேசி வாயிலாக தன்னிடம் பேசிய நபருக்கு, அவர் குறிப்பிட்ட எண்ணுக்கு தனது அடையாள ஆவணங்களை அனுப்பியுள்ளார்.

அதோடு நிற்காமல் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு செலுத்தியுள்ளார். சில மாதங்கள் ஆகியும் லோன் தராமல் ஏமாற்றியதால் சந்தேகமடைந்த கணேஷ் சங்கர் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை ஏற்றுக்கொண்ட வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் ஒரு தனி குழுவை அமைத்து அடையாறு காவல் சைபர் குற்றப்பிரிவுடன் இணைந்து செல்ஃபோன் எண் மற்றும் தரைவழி இணைப்பு எண்களை ஆய்வு செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் போலி கால் சென்டர் மூலம் அழைப்பு வந்தது தெரியவந்தது. செல்போன்கள் மூலம் வாடிக்கையாளரிடம் உடனுக்குடன் லோன் தருவதாக கூறி, இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

விசாரணை குறித்து அறிந்த முக்கிய குற்றவாளியான பிரேம்குமார் தலைமறைவாகியுள்ளார். அந்த போலி கால் சென்டரை நிர்வகித்துவந்த பிரேம்குமார் மனைவி பென்னிஷா, விக்னேஷ் ஆகிய இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து தொலைபேசி, 31 செல்ஃபோன்கள், 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளியான பிரேம்குமாரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:வங்கிக் கடன் மோசடி: ஊழியரிலிருந்து கார் டீலர்கள் வரை செக்

ABOUT THE AUTHOR

...view details