தமிழ்நாடு

tamil nadu

விமான நிலைய பெண் ஊழியர்கள் வீடுகளில் சோதனை.. ரூ.5 கோடி விலையிலான தங்கம் பறிமுதல் - 4 பேர் அதிரடி கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 8:29 AM IST

Chennai Airport: டி.ஆர்.ஐ அதிகாரிகள் பல்லாவரம், குரோம்பேட்டை, மண்ணடி ஆகிய இடங்களில் நடத்திய சோதனைகளில் 5 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

dri-busts-gold-smuggling-network-at-airport-4-people-arrested
கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை:துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெருமளவு கடத்தல் தங்கம் விமானங்கள் மூலம் சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்படுவதாகவும், அந்தத் தங்கத்தை விமான நிலைய ஊழியர்கள் சிலர் ரகசியமாக வெளியில் எடுத்துச் செல்வதாகவும் சென்னை தியாகராய நகரில் உள்ள டி.ஆர்.ஐ-க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலில் பேரில் தனிப்படை அமைத்த டி.ஆர்.ஐ அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களைத் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் பெண் ஊழியர்களான சினேகா (30) மற்றும் சங்கீதா (28) ஆகிய இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இரு பெண்களும் பணி முடிந்து, வீடுகளுக்குச் சென்ற போது, அவர்களை ரகசியமாகப் பின் தொடர்ந்த அதிகாரிகள், அதில் ஒரு பெண் வீடு பல்லாவரத்திலும், மற்றொரு பெண் வீடு குரோம்பேட்டையிலும் இருந்ததால், இரு குழுவாகப் பிரிந்து அவர்களது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி உள்ளனர்.

அப்போது வீட்டில் மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகள், தங்க உருளைகள் போன்ற 4.7 கிலோ தங்கம் கைப்பற்றபட்டுள்ளது. இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், துபாயில் இருந்து சென்னை வழியாக இலங்கை செல்லும் டிரான்சிட் பயணிகள் விமானங்களில் கடத்தி வரும் தங்கத்தை, உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து தங்களுடைய வீட்டில் வைத்து விடுவதாகவும், இதன் பின் கடத்தல் கும்பலின் ஏஜெண்டுகள் வந்து, தங்களிடம் இருந்து தங்கத்தை வாங்கிச் செல்வார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

அதன் பின்பு அதிகாரிகள் இரு பெண்களையும், தங்களது காவலில் வைத்துக் கொண்டு, தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் (நவ.27) அதிகாலை தங்கத்தை வாங்கிச் செல்வதற்காக ஒருவர் வந்துள்ளார். அவரை மடக்கிப் பிடித்த அதிகாரிகள், அவரிடம் நடத்திய விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஹர்ஷத் (27) என்பதும், தற்போது சென்னை மண்ணடியில் உள்ள விமான நிலைய ஒப்பந்த ஊழியர் கலையரசன் வீட்டில் தங்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதை அடுத்து டி.ஆர்.ஐ அதிகாரிகள், இரு பெண்கள் உள்பட 3 பேரை அழைத்துக் கொண்டு, மண்ணடியில் கலையரசன் வீட்டிற்குச் சென்று, சோதனை நடத்தி உள்ளனர்.

அப்போது 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 1.5 கிலோ தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கலையரசனையும் (30) கைது செய்துள்ளனர். இவர்தான், தங்கம் கடத்தும் ஆசாமிகளை, இந்த இரு பெண்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 2 பெண்கள் உள்பட 4 பேரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் சோதனையை தொடங்கிய சோதனை, சங்கிலித் தொடர்போல் பல்லாவரம், குரோம்பேட்டை, மண்ணடி ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு, மொத்தமாக ரூ.5 கோடி மதிப்புடைய பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சென்னையில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது!

ABOUT THE AUTHOR

...view details