தமிழ்நாடு

tamil nadu

வரதட்சணை கொடுமை - மணமான ஒரே வருடத்தில் இளம்பெண் தற்கொலை!

By

Published : Jul 30, 2020, 3:43 PM IST

சென்னை: வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரே வருடத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கொடுமை - மணமான ஒரே வருடத்தில் இளம்பெண்  தற்கொலை
வரதட்சணை கொடுமை - மணமான ஒரே வருடத்தில் இளம்பெண் தற்கொலை

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் பிரியங்கா (24). எம்பிஏ பட்டதாரியான இவருக்கும் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வரும் சென்னை காட்டாங்குளத்தூரை சேர்ந்த நிரேஷ்குமார் (28) என்பவருக்கும் மேட்ரிமோனி மூலமாக பெண்பார்த்து கடந்த 2019 ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணமான மூன்று மாதங்களிலேயே வரதட்சணை கொடுமை காரணமாக ஏற்பட்ட பிரச்சனையினால் பிரியங்கா தனது தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் நேற்றிரவு பிரியங்கா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் திருமணத்தின் போது பெண்ணுக்கு 120 சவரன் நகை போடுவதாகச் சொல்லி பெண் வீட்டார் 40 சவரன் நகை மட்டுமே போட்டதாகவும், இதனால் இரு வீட்டாருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை நடந்ததாகவும் தெரிய வந்தது.

இந்த வரதட்சணை பிரச்சனை காரணமாக பிரியங்காவை மணமகன் வீட்டார் துன்புறுத்தியதாகவும் இதன் காரணமாக திருமணமான மூன்று மாதங்களிலேயே பிரியங்கா சிந்தாதரிபேட்டையிலுள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் பிரியங்காவின் தாய், தந்தையர் அடிக்கடி நிரேஷ் குமாரிடம் மீதி நகையை போட்டு விடுவதாக சொல்லி சமாதானம் செய்ய முயற்சி செய்து வந்துள்ளனர். ஆனால் நிரேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மொத்த நகையையும் போட வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியங்கா நேற்றிரவு தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து நிரேஷ் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details