தமிழ்நாடு

tamil nadu

ஈபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு - வாபஸ் பெற அனுமதி கேட்ட திமுக - ஏன்?

By

Published : Jul 7, 2023, 11:59 AM IST

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை முறைகேடு தொடர்பான வழக்கை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி மீதான டெண்டர் முறைக்கேடு வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கேட்ட திமுக
எடப்பாடி மீதான டெண்டர் முறைக்கேடு வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கேட்ட திமுக

சென்னை:அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை முறைகேடு தொடர்பான வழக்கை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும் என திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் நெடுஞ்சாலைப் பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீட்டின் மூலம் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, கடந்த 2018ஆம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்தது. அத்துடன் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, எடப்பாடி பழனிசாமி மீது குற்றமில்லை என கடந்த 2018ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் ஏற்கவில்லை என்றும், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த அனுமதித்து உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆர்.எஸ். பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, புகார் மீதான நடவடிக்கையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளதால், இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி, மனுதாரர் பாரதி தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை படிக்காமல் சிபிஐ விசாரணைக்கு முன்பு உத்தரவிடப்பட்டதாகவும், அதனால் 2018ஆம் ஆண்டு ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை முடிக்க வேண்டும் எனவும், பாரதி மனுவை திரும்பப் பெற அனுமதிக்கக் கூடாது என்றும் வாதிட்டார். இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 13ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க:மேட்டூர் கொலை வழக்கு: குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிறப்பித்த ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details