தமிழ்நாடு

tamil nadu

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிவிப்பு: ஜூலை 3 ஆம் தேதி வகுப்புகள் துவக்கம்!

By

Published : Jun 21, 2023, 7:46 PM IST

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 31 ஆயிரத்து 488 மாணவர் சேர்க்கைக்கான காலியிடங்கள் உள்ள நிலையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு வகுப்புகள் துவக்கத்திற்கான அறிவிப்பை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் 3 ஆம் தேதி துவக்கம்
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் 3 ஆம் தேதி துவக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 31 ஆயிரத்து 488 மாணவர் சேர்க்கைக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, கல்லூரிகளில் ஜூன் 30 ஆம் தேதி வரையில் நடத்தப்படும் என்றும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3 ஆம் தேதி துவக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூன் 22 ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் சேர்க்கைக்காக தமிழகத்தில் கல்லூரிகளின் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 8 ஆம் தேதி முதல் மே மாதம் 22 ஆம் தேதி வரையில் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு கல்லூரியில் உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களின் வசதிக்காக முதல் முறையாக தகவல் மையம் அமைக்கப்பட்டது.

163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேர்வதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து கல்லூரிகளுக்கு மே 25 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. சிறப்பு ஒதுக்கீடு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் மே 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜூன் 1 ம் தேதி முதல் 10ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

முதல்முறையாக அரசுக் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மாணவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வுச் செய்த பின்னர், வேறுக் கல்லூரியில் சேர்வதை தவிர்க்கும் வகையில் அம்சங்கள் கொண்டுவரப்பட்டன. மேலும் ஒற்றை சாளர முறையில் கல்லூரிக் கல்வி இயக்குனரின் இணையதளத்தில் இருந்து அனுமதிக் கடிதம் பெற்றப் பின்னரே சேர்க்கை நடத்தப்பட்டது. இந்தக் கலந்தாய்வின் மூலம் 40 ஆயிரத்து 287 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களில் 15 ஆயிரத்து 34 மாணவர்கள், 25 ஆயிரத்து 253 மாணவிகள் ஆவார்கள். 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் 10,918 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து ஜூன் 12-ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. முதல் கட்ட கலந்தாய்வு மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 75 ஆயிரத்து 811 மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அவர்களில் மாணவர்கள் 31,621 பேரும், மாணவிகள் 44,190 பேரும் சேர்ந்துள்ளனர். இதில் 31 ஆயிரத்து 488 காலியாக உள்ளன. மாணவர்களை விட மாணவிகள் 12 ஆயிரத்து 569 பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். மேலும் கூடுதலாக அரசு பள்ளிகளில் படித்த 21 ஆயிரம் மாணவிகள் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 75 ஆயிரத்து 811 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இன சுழற்சி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் ஜூன் 30 ஆம் தேதி வரையில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். அதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி வகுப்புகள் துவங்கப்படும் என அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:சிபிசிஐடியில் வேலை என ரூ.40 லட்சம் மோசடி செய்த பாஜக பிரமுகர் கைது

ABOUT THE AUTHOR

...view details