தமிழ்நாடு

tamil nadu

Lockup Death : விக்னேஷ் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை

By

Published : Apr 29, 2022, 6:47 PM IST

காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விக்னேஷ் குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர்
செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர்

சென்னை கெல்லீஸ் பகுதியில் கத்தி மற்றும் கஞ்சாவுடன் வந்ததாக தலைமைச்செயலக காலனி காவல் துறையினர், விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோரை கடந்த 18ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ் கடந்த 19ஆம் தேதி வலிப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து விக்னேஷின் இறப்பை மறைக்க காவல் துறை சார்பில் 1 லட்சம் ரூபாய் விக்னேஷ் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உயிரிழந்த விக்னேஷின் சகோதரர்களான வினோத் மற்றும் சூர்யா ஆகியோர் காவல் துறை தரப்பில் வழங்கப்பட்டதாக கூறப்படும் 1 லட்சம் ரூபாயை திரும்ப அளிக்க எழும்பூர் நீதிமன்றத்திற்கு இன்று காலை வந்தனர். அப்போது விசாரணைக்கு ஆஜராகும்போது சாட்சியங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதி யஸ்வந்த் ராவ் விக்னேஷ் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் ப.பா. மோகன், “கடந்த 18ஆம் தேதி விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் கெல்லீஸ் சாலையில் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தபோது காவல் ஆய்வாளர் மோகன் தாஸ் உள்ளிட்ட காவலர்கள் வழிமறித்து, அவர்கள் குடிபோதையில் இருந்த காரணத்தினால் காவலர்கள் விக்னேஷின் தலையில் தாக்கியதில் காவல் நிலையத்திலேயே இறந்துவிட்டார்.

அவருடன் கைது செய்யப்பட்ட சுரேஷ் மீது பொய்யான வழக்கைப்பதிவு செய்து நீதிமன்றத்தில் அடைத்துள்ளனர். விக்னேஷின் குடும்பத்தினரிடமும், நீதிபதியிடமும் இறந்த தகவலை கூறாமல் மறைத்தனர். இதுமட்டுமின்றி குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி ஆய்வாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட காவல் துறையினர் செயல்படாமல் சாட்சியங்களை அழிக்க விக்னேஷின் உடலை எரிப்பதற்கு முயன்றுள்ளனர்.

சாட்சியங்களை மறைப்பதற்காக விக்னேஷின் குடும்பத்தாருக்கு 1 லட்சம் ரூபாயை காவல் ஆய்வாளர், பெண் காவலர் உள்ளிட்ட காவலர்கள் வழங்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரின் குடும்பத்தினருக்கு வழக்கு குறித்து எதுவும் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர். காவல் துறையினர் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் பின்பற்றவில்லை. இந்த வழக்கில் விக்னேஷின் குடும்பத்தாருக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என எழும்பூர் நீதிபதியிடம் கோரியுள்ளோம்” எனக் கூறினார்.

’விக்னேஷ் உயிரிழந்த வழக்கு தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும், அரசு வழிகாட்டுதலின்படி 12.5 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகையாக விக்னேஷின் குடும்பத்தாருக்கு அரசு அளிக்க வேண்டும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர்

மேலும் கைது செய்யப்பட்ட மற்றொருவரான சுரேஷிற்கு உரிய சிகிச்சையளிக்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அவர் கூறினார்.

இந்நிலையில், வருகிற திங்கட்கிழமை விக்னேஷின் குடும்பத்தாருக்கு சம்மன் அளிக்க இருப்பதாகவும், அப்போது விசாரணையில் காவல் துறையினர் வழங்கப்பட்டதாக கூறப்படும் 1 லட்சம் ரூபாயை சமர்ப்பிக்குமாறு நீதிபதி கூறியதாகவும் வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:விக்னேஷ் லாக்கப் மரணம் : ரூ.1 லட்சத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க குடுப்பத்தினர் முடிவு?

ABOUT THE AUTHOR

...view details