தமிழ்நாடு

tamil nadu

13 கிலோ தங்கம்..! ஒரே விமானத்தில் 113 குருவிகள்..! கூண்டோடு தூக்கிய சுங்கத்துறை அதிகாரிகள்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 12:51 PM IST

smuggling from Oman: ஓமன் நாட்டிலிருந்து சென்னை வந்த 113 பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 13 கிலோ தங்கம், ஐபோன்கள், லேப்டாப்கள் என சுமார் ரூ.14 கோடி மதிப்புடைய பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

customs officials seized 14 crore worth products including 13 kg gold and iphone in chennai airport
ஒரே விமானத்தில் வந்த 113 கடத்தல் பயணிகள் - நாள் முழுவதும் நடந்த சோதனை

சென்னை: ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (செப்.14) காலை 8 மணிக்கு வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெருமளவு தங்கம், ஐபோன்கள், லேப்டாப்கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பொருட்களை பயணிகள் ரகசியமாக கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து அவர்களையும் சோதனைக்கு அழைத்துக் கொண்டனர். பின்னர் சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை இணைந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த 186 பயணிகளையும் நிறுத்தி பல மணி நேரமாக விசாரணை நடத்தினர். அதில் 73 பேர் கடத்தல் விவகாரங்களில் தலையிடாத பயணிகள் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த 73 பேரையும் சுங்க அதிகாரிகள் வெளியில் செல்ல அனுமதித்தனர்.

அதன் பின்பு மீதமிருந்த 113 பயணிகளை சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதற்கு அவர்கள் சரியாக பதில் அளிக்காத காரணத்தால், அதிகாரிகள் அவர்களை துருவி துருவி சோதனை இட்டதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று மாலை 3 மணிக்கு மேலாகவும் அந்த விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் அந்த பயணிகள் எங்களை பசி பட்டினியில் வதைத்து கொண்டு இவ்வாறு விசாரணை நடத்துகிறீர்களே? என்று கூறி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், எங்களை வெளியில் அனுப்புங்கள் நாங்கள் சாப்பிட்டுவிட்டு மீண்டும் விசாரணைக்கு வருகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் அதிகாரிகள் அவர்களை வெளியே அனுப்ப மறுத்துவிட்டு, பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே உணவு ஏற்பாடு செய்துள்ளனர்.

பின்னர் உணவு வந்ததும் அனைவரையும் தரையில் உட்கார வைத்து, வாழை இலைகள் போட்டு திருமண வீடு போல் சுங்கத்துறை அலுவலகத்தில் பந்தி பரிமாறப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், அதிகாரிகள் மீண்டும் தங்களது விசாரணை மற்றும் சோதனையைத் தொடங்கியுள்ளனர். மேலும் இந்த சோதனைகள் நேற்று நள்ளிரவு வரை நடந்ததாக தெரிகிறது.

அதில் பல பயணிகள் தங்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள், தங்கப் பசைகள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததாகவும், சிலர் சூட்கேஸ் லைனிங் உள்ளே தங்கத்தை ஸ்ப்ரிங் கம்பிகளாக மறைத்து வைத்திருந்தாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதோடு சூட்கேஸ் மற்றும் பைகளில் ரகசிய அறைகள் வைத்து 120 ஐபோன்கள், 84 ஆண்ட்ராய்டு போன்கள் என மொத்தம் 204 போன்கள், வெளிநாட்டு சிகரெட்கள், பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூக்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட பொருட்களும் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்தனர்.

இதில் தங்கம் மட்டும் மொத்தம் சுமார் 13 கிலோ இருந்துள்ளது. அதில் 10 கிலோ தங்க கட்டிகள், 3 கிலோ தங்க பசைகள் ஆகும். இதையடுத்து தங்கம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், இவைகளின் மொத்த சர்வதேச மதிப்பு கிட்டத்தட்ட ரூ.14 கோடி இருக்கும் என தெரிவித்துள்ளனர். அதன்பின்பு கடத்தல் பயணிகள் 113 பேர் மீதும் சுங்க சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 1 கோடிக்கு ரூபாய்க்கு மேல் கடத்தல் பொருட்கள் கொண்டு வருபவர்களை மட்டுமே சுங்க சட்டப்படி கைது செய்ய முடியும். அதற்கு குறைவாக கடத்தல் பொருட்கள் இருந்தால் வழக்குகள் பதிவு செய்து ஜாமீனில் விடுவித்து விடலாம் என்பது சட்டமாகும். எனவே இவர்கள் 113 பேர்களையும் அதிகாரிகள் ஜாமீனில் விடுவித்தனர்.

ஆனாலும் இந்த 113 பேரும் சாதாரண கடத்தல் குருவிகள் தான். இவர்களை இயக்கும் முக்கிய கடத்தல் கும்பலின் தலைவர்கள் யார்? என்று மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: மதுரை அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம் கண்டெடுப்பு; சாலைப் பணியால் அழியும் அவல நிலை!

ABOUT THE AUTHOR

...view details