சென்னை: சென்னை மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகள் மழை நீரில் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்து, தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
கடந்த டிசம்பர் 4ஆம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பெரும்பாலான இடங்கள் தொடர் மழை காரணமாக வெள்ளக்காடாக திகழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு, மத்திய அரசு, ராணுவத்தினர், அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரும் தேவையாக அடிப்படை உதவிகளை செய்து வருகின்றனர்.
மேலும், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சில இடங்களில் மழை நீருடன் சாக்கடை கழிவுகளும் கலந்து வருவதால், பல்வேறு தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மீட்புப் பணிகள் அரசால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மணலியில் செயல்பட்டு வரும் சிபிசிஎல் நிறுவனம் எல்பிஜி, பெட்ரோல், விமான எரிபொருள் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களைச் சுத்தகரித்து, தமிழ்நாடு மாநிலத்திற்கு வழங்கி வருகிறது. இதனிடையே இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக, சுத்திகரிப்பு நிலையத்திற்குள் வெள்ள நீர் புகுந்து, சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த எண்ணெய் கழிவுகள், மழைநீரில் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்ததாக புகார் எழுந்தது. இதனால் கடுமையான துர்நாற்றமும் வீசி, தொற்று ஏற்படவும் வாய்ப்பாகவும் மாறியது.