சென்னை:இந்திய தணிக்கை துறை 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை ஆய்வு நடத்தியதில் அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்திய தணிக்கை துறையின் முதன்மை கணக்கு தணிக்கையாளர்கள் சி. நெடுஞ்சழியன் மற்றும் கே.பி. ஆனந்த் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், “அதிமுகவின் இந்த அறிக்கையில் ரூ.396.30 கோடி மதிப்புள்ள வரி, வட்டி மற்றும் தண்டத்தொகை விதிக்காமல் இருந்தது அல்லது குறைவாக விதிக்கப்பட்டது என எட்டு குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. மேலும், பெரும்பாலான திட்டங்கள் நிதி ஒதுக்கியும் நிறைவேற்றாமல் போனது.
வரவு - செலவு திட்ட மேலாண்மை:2021-22 ஆண்டில், சட்டப்பேரவை அனுமதித்த மூல ஒதுக்கீட்டையே முழுமையாக செய்ய இயலாத நிலையில், 59 நேர்வுகளில் ஒவ்வொன்றிலும் தலா ரூ 50 லட்சத்திற்கும் கூடுதலாக மொத்தம் ரூ 242.64 கோடி மீண்டும் துணை மானியமாக கோரிப் பெற்றது தேவையற்று போனது.
கணக்குகள் மற்றும் நிதி நிலை அறிக்கை நடைமுறைகளின் தரம்:2018-22 கால கட்டத்தில் வசூலிக்கப்பட்ட மின்சாரம் மீதான வரியில், 70 விழுக்காடு அரசுக் கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை. வசூலிக்கப்பட்ட வரியை தமிழ்நாடு மின்சாரத் துறை தன்வசமே வைத்துக்கொண்டது. தணிக்கையாளர்கள் சில திட்டங்களை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை.
குறிப்பாக பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கு 60 விழுக்காடு வீடுகளை தமிழ்நாடு அரசு கட்ட இயலவில்லை. இது மத்திய அரசு நிர்ணயித்த நிபந்தனைகளை நிறைவேற்றததால் மத்திய அரசின் ரூ. 1,515.60 கோடி நிதி உதவியை உரிய நேரத்தில் தமிழ்நாடு அரசால் பெற முடியவில்லை.