சென்னை:திமுக சார்பில் கடந்த 26ஆம் தேதி ஆர்.கே. நகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ், திமுக பேச்சாளர் சைதை சாதிக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது சைதை சாதிக், பாஜகவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் நடிகை குஷ்பூ, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியது தொடர்பான வீடியோ வெளியானது.
இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக எம்பி கனிமொழி, வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்நிலையில் நடிகைகள் குறித்து ஆபாசமாகவும், இழிவாகவும் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் இன்று (அக்.29) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் நதியா சீனிவாசன், “கடந்த 26 ஆம் தேதி ஆர்.கே. நகர் பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திமுக தென்சென்னை சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் சைதை சாதிக் பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவான வார்த்தையால் இழிவுபடுத்தும் வகையில் பேசியது கண்டிக்கதக்கது.
சமுதாயத்தில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பெண்கள் வெளியே வருகின்றனர். ஆனால் அவர்களை தொழில் சார்ந்தோ, தனிமனித தாக்குதல் என்பதை மனதில் வைத்துக்கொண்டு பாஜக பெண் தலைவர்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். குறிப்பாக திமுக நிர்வாகிகள் பெண்களை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.