தமிழ்நாடு

tamil nadu

பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 9:52 PM IST

CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், திருக்கோயிலில் பணிபுரிந்து ஒய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஒய்வூதியத்தை உயர்த்தி வழங்கினார்.

தலைமை செயலகம்
தலைமை செயலகம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.20) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டும் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கினார்.

அதேபோல் குடும்ப ஓய்வூதியத்தை ரூ.1,500/-லிருந்து ரூ.2,000/-மாகவும் உயர்த்தி அதற்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக, ஓய்வுபெற்ற 5 திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் 5 பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியத்திற்கான காசோலைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் ஆண்டொன்றுக்கு 2,454 ஓய்வூதியதாரர்களும், 304 குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவர். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாட்டின் புத்தொழில் சூழமைவை மேம்படுத்தும் வகையில் 50க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை உள்ளடக்கிய “தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை – 2023”-ஐ வெளியிட்டார்.

மேலும், தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் 8 நிறுவனங்களுக்கு 10 கோடியே 85 லட்சம் ரூபாய் பங்கு நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளையும் வழங்கினார்.

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை – 2023 சிறப்பம்சங்கள்:தற்போது "புத்தொழில்" என்பதற்கான வரையறை அம்சங்களுடன், பட்டியலினத்தவர், பழங்குடியின சமூகத்தினர், பிற துறைகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள புதுமையான மாதிரிகளை பயன்படுத்தி தாங்கள் சார்ந்த சமூகங்களின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஒரு நிறுவனத்தினை உருவாக்கினால், அந்த நிறுவனமும் புத்தொழில் என்று மாநில அரசால் அங்கீகரிக்கப்படும்.

இணை நிதியம் (Co-Creation Fund): பிற துணிகர முதலீட்டு நிறுவனங்களின் (Venture capital firms) வழியாக முதலீடு செய்யும் பெரு நிதியம் (Fund of Funds) ஒன்று ரூ.100 கோடி மதிப்பில் உருவாக்கப்படும். இந்த பெரு நிதியமானது வட்டார அளவில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்கள், ஊரக வாழ்வாதார மேம்பாடு, பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் தனியார் துணிகர முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு சிறப்புரிமை அளிக்கும்.

ஸ்டார்ட்-அப் தமிழா: மாநிலத்தில் புத்தொழில் முனைவு மற்றும் முதலீட்டுப் பண்பாட்டினை பரவலாக்கும் விதமாக “ஸ்டார்ட் அப் தமிழா” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிக்கப்படும்.

ஸ்மார்ட் கார்டு: தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து நியாயமான விலையில் பெறக்கூடிய வகையில் அத்தகைய தொகுப்பு அடங்கிய ஸ்டார்ட் அப் ஸ்மார்ட் கார்ட் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

சமூக நீதி தொழில் வளர் மையம்: ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்தவர்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சிகள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை அளிக்கும் சமூக நீதி தொழில் வளர் மையம் நிறுவப்படும்.

பெண்களுக்கான சிறப்பு தொழில் வளர் மையம்: புத்தொழில் முனைவில் ஈடுபடும் பெண்களின் பிரத்யேக தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஒரு தொழில் வளர் மையம் அமைக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம்பாலினத்தவர்களுக்கான திட்டங்கள்: மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களால் உருவாக்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் மானியம், டான்சீட் (Tanseed) திட்டத்தில் சிறப்புரிமை மற்றும் இலவச தொழில்வளர் காப்பான் போன்ற வாய்ப்புகள் வழங்கப்படும்.

டான் ஃபண்ட் (TANFUND): 'டான் ஃபண்ட்' என்ற பெயரில் உலகளாவிய துணிகர முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் இயங்கும் புத்தொழில் நிறுவனங்களுடன் இணைக்கும் முதலீட்டு உதவித்தளம் தொடங்கப்படும்.

உலக சந்தைகள் ஒருங்கிணைப்பு: தமிழ்நாட்டில் இயங்கும் புத்தொழில் நிறுவனங்கள் வாய்ப்புகள் நிறைந்த பல்வேறு உலக நாடுகளிலும் கால் பதிக்க உதவும் வகையில் உலகிலுள்ள பல்வேறு முக்கிய நகரங்களிலும் புத்தொழில் ஒருங்கிணைப்பு மையங்கள் தொடங்கப்படும்.

தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதி புதுயுக தொழில்முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை அடைவதற்காக தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தப் பிரிவுகளைச் சார்ந்த தொழில்முனைவோர்களால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடனாக நிதி வழங்க கடந்த நிதி ஆண்டில் 30 கோடி ரூபாய் நிதியுடன் இந்த நிதியம் தொடங்கப்பட்டது. இந்த நிதி ஆண்டில் 50 கோடி ரூபாயாக இந்நிதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:செப்.24 முதல் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கம்!

ABOUT THE AUTHOR

...view details