தமிழ்நாடு

tamil nadu

சிறாவயல் மஞ்சுவிரட்டில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 9:01 AM IST

Siravayal Manjuvirattu: சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டு விழாவின்போது உயிரிழந்த சிறுவன் உள்பட இருவரது குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், திருச்சி சூரியூர் மற்றும் புதுக்கோட்டை வன்னியன் விடுதி ஆகிய இடங்களில் கோலாகலமாக நடைபெற்றது. அதேபோல், மதுரை எலியார்பத்தி மற்றும் சிவகங்கை சிறாவயல் ஆகிய இடங்களில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், சிறாவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார்.

இதில் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 272 காளைகளும், 81 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். அது மட்டுமல்லாமல், 8 மருத்துவக் குழுக்களும், சுமார் 1,000 காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டபோது, மாடு முட்டியதில் ஒரு சிறுவனும் மற்றும் முத்துமணி (32) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். அது மட்டுமல்லாமல், சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சிறாவயல் மஞ்சுவிரட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சியில் ஜனவரி 17 அன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே நடைபெற்ற சம்பவத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சி, மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துராமன் என்பவரது மகன் முத்துமணி (32) மற்றும் சிவகங்கை மாவட்டம்,

திருப்பத்தூர் வட்டம், கே.வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் பாஸ்கரன் (12) ஆகிய இருவரும் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரமானச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, நேற்றைய முன்தினம் மதுரை எலியார்பத்தியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் பார்வையாளர் ரமேஷ் என்பவர் மாடு முட்டியதில் காயம் அடைந்து உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சிறாவயல் மஞ்சுவிரட்டில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details