தமிழ்நாடு

tamil nadu

நீட் குறித்து மு.க ஸ்டாலின் உரை: கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டும்!

By

Published : Aug 15, 2023, 7:14 PM IST

கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வந்தால் தான் நீட் மரணங்களுக்கு முடிவு காண முடியும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

Tamil Nadu CM MK Stalin

சென்னை: கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வந்தால்தான் நீட் மரணங்களுக்கு முடிவு கிடைக்கும் என சுதந்திர தினவிழா உரையில் பேசி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதந்திர தின விழாவில் நீட் பிரச்சனை எதிரொலிது இருக்கும் நிலையில் சமீப கால நிகழ்வுகள் இதற்கு காரணமாக அமைந்து இருக்கின்றன.

நீட் தேர்வு குறித்த ஆளுநரின் பதில்: கடந்த 12ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது, மாணவரின் தந்தை ஒருவர் நீட் தேர்வுக்கு எப்போது விலக்கு வழங்குவீர்கள் எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்குப் பதிலளித்த ஆளுநர் ஆர்.என் ரவி, நீட் மசோதாவிற்கு விலக்கு அளிக்கும் அதிகாரம் எனக்கு இருந்தாலும், நான் கையெழுத்திட மாட்டேன் என திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டிப் போடும் திறனைக் கேள்விக்குறியாக்கும்" எனவும் ஆளுநர் ரவி விளக்கம் அளித்திருந்தார்.

மு.க ஸ்டாலின் அறிக்கை: இது குறித்து அறிக்கை வெளியிட்ட மு.க ஸ்டாலின், நீட் தேர்வு விலக்கு மசோதாவைப் பொறுத்த வரை ஆளுநர் ஆ.என் ரவிக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும், ஏதோ அந்த அதிகாரம் தனக்கு இருப்பதைப் போல நினைத்துக் கொண்டு அவர் காற்றில் கம்பு சுற்றிக் கொண்டு இருக்கிறார் எனவும் விமர்சித்திருந்தார்.

மேலும், இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும் போது நீட் தடுப்புச் சுவர் உதிர்ந்து விழும். "கையெழுத்துப் போடமாட்டேன்" என வீண் வாதம் செய்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் எனவும் ஸ்டாலின் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே கடந்த சனிக்கிழமை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவரான ஜெகதீஷ்வரன் நீட் தேர்வில் இருமுறை தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். அவரின் தந்தையும் ஒரு நாள் இடைவெளியில் தற்கொலையால் உயிரை மாய்க்கவே தமிழ்நாடு முழுவதும் பெரும் பேசு பொருளானது நீட் பிரச்சனை.

மாணவனின் தந்தைக்கு அஞ்சலி செலுத்த உதயநிதி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் நேரில் சென்றனர். அப்போது மாணவனின் நண்பரான பயாஸ் உணர்ச்சி பொங்க பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. செய்தியாளர்களிடம் பேசிய பயாஸ் இங்கு பணம்தான் மாணவர்களின் கனவை தீர்மானிக்கிறது எனவும் இங்கு படிக்கும் மாணவர்கள் கூடுதலாக வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும், நீட் , நீட் என்று கூறுகிறீர்களே நீட் தேர்வுக்கு முன்பு மருத்துவர்களான அனைவரும் தகுதி அற்றவர்கள் என கூறுகிறீர்களா எனவும் கேள்வி எழுப்பினார். அது மட்டும் இன்றி இங்கு ஏழை, எளிய மாணவர்களால் தங்கள் மருத்துவர் கனவை நனவாக்க முடியாது எனவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மு.க ஸ்டாலின் சுதந்திர தின உரை: இப்படி ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும், மாணவர்களின் எதிர்பார்ப்புக்கும் இடையே பல கட்ட போராட்டங்களும், விவாதங்களும், பிரச்சனைகளும் நடந்து வரும் நிலையில், தீர்வுதான் என்ன எனக் காத்திருக்கிறது தமிழகம்.

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற சுதந்திர தின விழா உரையில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் நீட் தேர்வு குறித்துப் பேசி இருக்கிறார். அதில், மக்களுடன் நேரடி தொடர்புகொண்ட அனைத்து துறைகளும் மாநில பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் எனவும், குறிப்பாக, கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

அதைச் செய்தால் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறைகளை முற்றிலுமாக அகற்றலாம் எனக்கூறிய மு. க ஸ்டாலின், கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, மனித ஆற்றல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகம் தனது சிறப்பான பங்களிப்பை நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் வழங்கி வருகிறது எனக்கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் காவலர் விருது: தேனி எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ்க்கு அறிவிப்பு.. ஏன் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details