தமிழ்நாடு

tamil nadu

12ம் வகுப்பு - விடைத்தாள் நகல் பெற, மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

By

Published : May 8, 2023, 4:17 PM IST

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 9ஆம் தேதி காலை 11 மணி முதல் 13ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வர்கள் தங்களது விடைத்தாள் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு, அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு வேண்டி விண்ணப்பிக்க முடியும்.
விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணமாக ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275-ம் , மறுகூட்டல் கட்டணமாக உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305-ம், ஏனையப் பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் 12ம் தேதி முதல் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்'' என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: +2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி!

ABOUT THE AUTHOR

...view details