தமிழ்நாடு

tamil nadu

வெள்ள பாதிப்பு குறித்து விசாரித்த பிரதமர் மோடி; முதலமைச்சர் ஸ்டாலின் ரியாக்‌ஷன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 10:05 PM IST

Chief Minister Stalin tweet: தமிழகத்தின் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கன மழை ஆகியவற்றால் ஏற்பட்ட சேதம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசாரித்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Chief Minister Stalin said Prime Minister Modi enquire about the michaung and South districts flood damage
முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை:தமிழகத்தில் டிசம்பர் மாத துவக்கத்தில் மிக்ஜாம் புயல் தாக்கத்தால் பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. புயல் தாக்கத்தால் வந்த பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காகத் தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி கோரி இருந்தது.

இதனையடுத்து மத்திய குழுவினர் தமிழகத்தில் மிக்ஜாம் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் டிச.17, 18ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்கள் அதி கனமழையால் பெரும் வெள்ளத்தைச் சந்தித்தன.

இதனையடுத்து மிக்ஜாம் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேதத்திற்கு நிவாரணம் கோரியிருந்த நிலையில், அந்த நிவாரண தொகையை விரைந்து வழங்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தார். அப்போது தென் மாவட்டங்களில் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். தொடர்ந்து அப்பாதிப்புகளைச் சீரமைத்திடத் தேவையான நிதியினையும் விரைந்து ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு கோரிக்கை மனுவினை (Memorandum) அளித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கைக்குப் பிரதமர் பதில் அளித்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட உடனே, தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத பெருவெள்ளம் குறித்துக் கேட்டறியப் பிரதமர் நரேந்திர மோடி என்னை அழைத்திருந்தார்.

கடும் நிதி நெருக்கடிக்கிடையே மாநில அரசு மேற்கொண்டு வரும் பெரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அவரிடம் விளக்கிக் கூறி, ஒன்றிய அரசிடம் இருந்து உடனடி நிதி உதவியைக் கோரினேன்.

இந்த இரட்டைப் பேரிடரில் இருந்து தமிழ்நாடு மீண்டெழ ஒன்றிய அரசு உதவும் என உறுதியளித்த பிரதமர், வெள்ளப் பாதிப்பை மதிப்பிட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நியமித்திருப்பதாகவும் தெரிவித்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கோவை - பொள்ளாச்சி புதிய ரயில்..! அமைச்சர் எல்.முருகன் துவங்கி வைத்தார்!

ABOUT THE AUTHOR

...view details