தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By

Published : Aug 16, 2021, 1:22 PM IST

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஆக.19) மற்றும் வெள்ளிக்கிழமை (ஆக.20) மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஆக.16) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள்ள நீலகிரி, கோயம்புத்தூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை (ஆக.17), நாளை மறுநாள் (18) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வானிலை ஆய்வு மையம்

மேலும், வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் 17ஆம் தேதிவரை:

மத்திய மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் ஒட்டிய தென் கிழக்கு இலங்கை பகுதிகளில் மணிக்கு மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்:

ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை:

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை!

ABOUT THE AUTHOR

...view details