சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்திலிருந்து வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கை தாமதமாகக் கிடைக்கின்றது போன்ற விமர்சனங்கள் வானிலை மைய பணியாளர்களைப் புண்படுத்தும் விதமாகவும், நமது இந்தியத் தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், “சமீபமாக, சென்னை வானிலை மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாகத் தவறான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இந்திய வானிலை துறையில் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கணினிகள், இஸ்ரோவின் செயற்கைக்கோள் வசதிகள், ரேடார்கள் மற்றும் தானியங்கி வானிலை சேகரிப்பன்கள் உலகத்தரத்திற்கு ஒப்பானவை.
சென்னை மண்டல வானிலை மையத்திலும் இத்தகைய கருவிகளே பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக, சென்னை வானிலையைக் கண்காணிக்க இரண்டு டாப்ளர் ரேடார்களும், தென் தமிழகத்தைக் கண்காணிக்க மூன்று டாப்ளர் ரேடார்களும் பயன்பாட்டில் உள்ளன. இதில் X band வகை ரேடார் இஸ்ரோ தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டதாகும்.