சென்னை:காட்டு யானைகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கு உள்ளிட்ட வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் விசாரணையின் போது, நீதிமன்றத்துக்கு உதவியாக இருக்கும் தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ்ஜை, அரசு ரப்பர் கழகத்துக்கு பணிமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சொந்த விருப்பத்தினால் தான் இடமாற்றம்
இதையடுத்து, முதன்மை தலைமை வனப்பாதுகாவலரை, அரசு ரப்பர் கழகத்துக்கு பணிமாற்றம் செய்யும் திட்டம் உள்ளதா? என்பது குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் பரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ், சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே இடமாற்றம் கோரியதாகவும், அவரை இடமாற்றம் செய்வது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க இருந்த நிலையில், நீதிமன்றம் தலையிட்டதால் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.