தமிழ்நாடு

tamil nadu

நீலகிரி, கோவையில் வரும் 30, மே 1ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு!

By

Published : Apr 27, 2023, 5:21 PM IST

தமிழ்நாட்டில் வரும் 30ம் தேதி நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும், மே 1ம் தேதி 10 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

MET Forecasting
வானிலை முன்னறிவிப்பு

சென்னை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப்ரல் 27) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதேபோல நாளை (ஏப்ரல் 28) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (ஏப்ரல் 29) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு: வரும் 30ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 1-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக நாங்குநேரி (திருநெல்வேலி) 7 சென்டி மீட்டரும், அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), அதிராம்பட்டினம் AWS (தஞ்சாவூர்), வம்பன் KVK (புதுக்கோட்டை), புத்தன் அணை (கன்னியாகுமரி) பகுதிகளில் தலா 6 சென்டி மீட்டரும் மழைப் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை’’ என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் தடையை மீறி கொடிகட்டி பறக்கும் மாஞ்சா நூல் விற்பனை; 1 மாதத்தில் 3 பேர் பலத்த காயம்!

ABOUT THE AUTHOR

...view details