தமிழ்நாடு

tamil nadu

அகதிகளுக்கான ஐ.நா ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது - மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 12:23 PM IST

UN Convention on Refugees: அகதிகளுக்கான ஐநா ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என்று மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கூறியது, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் என விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் எம்.பி ரவிக்குமார்
விழுப்புரம் எம்.பி ரவிக்குமார்

சென்னை: நாடாளுமன்ற மக்களவையில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், “இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ள அகதிகளின் விவகாரத்தில், ஜி 20 நாடுகளின் பாலி மாநாட்டுத் தீர்மானம், சர்வதேச சட்டங்களையும், பலதரப்பு அமைப்பையும் மதிக்க வேண்டியது உலகில் அமைதியையும், நிலையான ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு அவசியம் என வலியுறுத்தியது.

அது குறித்த இந்திய அரசின் நிலைபாடு என்ன? மேலும் அகதிகளுக்கான ஐ.நா ஒப்பந்தத்திலும், நெறிமுறையிலும் இந்தியா கையெழுத்திடுமா? இல்லாவிட்டால் அதற்கான காரணம் என்ன?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். இவ்வாறு எழுப்பப்பட்ட எம்.பி ரவிக்குமாரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், “ஜி 20 நாடுகளின் பாலி மாநாட்டு ஒப்பந்தமானது கருத்தொற்றுமையின் அடிப்படையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் பதில்

அதில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. மேலும், அகதிகளுக்கான 1951ஆம் ஆண்டு ஐ.நா ஒப்பந்தமோ, 1967ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட நெறிமுறைகளோ வளரும் நாடுகளில், அகதிகள் அதிக எண்ணிக்கையில் நுழைவதால் ஏற்படும் பிரச்சினைகளை கணக்கில் கொள்ளவில்லை. எனவே, அவற்றில் கையெழுத்திடும் எண்ணம் தற்போது இந்திய அரசுக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த பதில் என்பது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள லட்சக்கணக்கான அகதிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், குறிப்பாக ஐநா சபை 1951-இல் இயற்றிய அகதிகளுக்கான ஒப்பந்தத்தில் 140 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன. இந்தியா அதில் கையெழுத்திடாதது மட்டுமின்றி, அகதிகளுக்கென சட்டம் எதையும் இதுவரை இயற்றவுமில்லை எனவும் எம்.பி.ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், UNHCR (United Nations High Commissioner for Refugees) இன் கணக்கின்படி, 2011இல் இந்தியாவில் 20 லட்சத்து 4 ஆயிரத்து 600 அகதிகள் இருந்தனர். அவர்களில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 ஆயிரத்து 200 பேரும், மியான்மரில் இருந்து வந்தவர்கள் 16 ஆயிரத்து 300 பேரும், திபெத்திலிருந்து வந்தவர்கள் ஒரு லட்சம் பேரும், 73 ஆயிரம் இலங்கைத் தமிழர்களும் அடங்குவர் என்ற புள்ளி விவரத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் அனைவருக்கும் மத்திய இணை அமைச்சரின் பதில் ஒரு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகையை வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details