சென்னை: நாடாளுமன்ற மக்களவையில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், “இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ள அகதிகளின் விவகாரத்தில், ஜி 20 நாடுகளின் பாலி மாநாட்டுத் தீர்மானம், சர்வதேச சட்டங்களையும், பலதரப்பு அமைப்பையும் மதிக்க வேண்டியது உலகில் அமைதியையும், நிலையான ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு அவசியம் என வலியுறுத்தியது.
அது குறித்த இந்திய அரசின் நிலைபாடு என்ன? மேலும் அகதிகளுக்கான ஐ.நா ஒப்பந்தத்திலும், நெறிமுறையிலும் இந்தியா கையெழுத்திடுமா? இல்லாவிட்டால் அதற்கான காரணம் என்ன?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். இவ்வாறு எழுப்பப்பட்ட எம்.பி ரவிக்குமாரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், “ஜி 20 நாடுகளின் பாலி மாநாட்டு ஒப்பந்தமானது கருத்தொற்றுமையின் அடிப்படையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. மேலும், அகதிகளுக்கான 1951ஆம் ஆண்டு ஐ.நா ஒப்பந்தமோ, 1967ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட நெறிமுறைகளோ வளரும் நாடுகளில், அகதிகள் அதிக எண்ணிக்கையில் நுழைவதால் ஏற்படும் பிரச்சினைகளை கணக்கில் கொள்ளவில்லை. எனவே, அவற்றில் கையெழுத்திடும் எண்ணம் தற்போது இந்திய அரசுக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.