தமிழ்நாடு

tamil nadu

“சோதனைகள் மூலம் எதிர்க்கட்சிகளை முடக்கி விடலாம் என பா.ஜ.க. கனவு காண்கிறது” கே.எஸ்.அழகிரி தாக்கு...

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 5:13 PM IST

TN Congress President KS Azhagiri: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு நிறுவனங்களான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறையைப் பயன்படுத்தி சோதனை நடத்தி எதிர்க்கட்சிகளை முடக்கி விடலாம் என பாஜக கனவு காண்கின்றது எனக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

BJP think opposition parties can be silenced through investigation TN Congress President KS Azhagiri said
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்

சென்னை: அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய மத்திய அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி ஆளுகிற மாநிலங்களிலும், சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும், மாநில அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சோதனைகள் மூலமாக எதிர்க்கட்சிகளை முடக்கி விடலாம் என்று பா.ஜ.க. அரசு கனவு காண்கிறது எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெற முடியாது என்கிற நிலையில் சாம, பேத, தான, தண்டங்களைப் பயன்படுத்தி எப்படியாவது எதிர்க்கட்சிகளை வீழ்த்திவிட வேண்டுமென்று கடுமையான முயற்சிகளை மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது.

2014 முதல் 2022-ஆம் ஆண்டு வரை மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை நடத்திய மொத்த சோதனைகளில் 95 சதவீதம் எதிர்க்கட்சி தலைவர்களைச் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. இதுவரை அமலாக்கத்துறை கடந்த 9 ஆண்டுகளில் பதிவு செய்த 1,569 வழக்குகளில் 9 வழக்குகளில் தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதை எதிர்த்து இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 14 கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் இத்தகைய நிறுவனங்களின் பழிவாங்கும் போக்கைத் தடுத்து நிறுத்த வழக்குத் தொடுத்துள்ளன. அந்தளவிற்கு அமலாக்கத்துறை எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கச் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்து சிறையில் அடைப்பது, மன உளைச்சலை ஏற்படுத்துவது, அரசியல் ரீதியாக அவர்களைச் செயல்பட விடாமல் முடக்குவதுதான் பா.ஜ.க.வின் நோக்கமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளர்த்தெடுப்பதில் படுதோல்வி அடைந்த நிலையில் தமிழக ஆளுநர், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை அமைப்புகளோடு கூட்டணி சேர்ந்து எதிர்க்கட்சிகளை ஒடுக்கி, பணிய வைத்து அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற பகல் கனவு தமிழக மக்களின் பேராதரவோடு தகர்த்தெறியப்படும் என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறேன்.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த பல ஆண்டுகளாகக் கொள்கை உறுதியோடு, பொதுவான இலக்கோடு செயல்பட்டு 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் பெற்ற வெற்றியை விட 2024 மக்களவை தேர்தலில் நாற்பதும் நமதே என்ற நோக்கத்தோடு வீரநடை போட்டுச் செயல்பட்டு வருகிறது.

எனவே, மக்கள் நலன்சார்ந்து தமிழக அரசு செயல்படுவதாலும், மதச்சார்பற்ற கூட்டணியின் ஒற்றுமையினாலும் மக்கள் பேராதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிற நிலையில் பா.ஜ.க.வின் பழிவாங்கும் போக்கு நிச்சயமாக முறியடிக்கப்படும்” என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக சோதனை! முக்கிய ஆவணங்கள் சிக்கின?

ABOUT THE AUTHOR

...view details