தமிழ்நாடு

tamil nadu

கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கும் சலுகை என்னும் தீர்மானம் அரசியல் காரணங்களுடையது - வானதி சீனிவாசன்!

By

Published : Apr 19, 2023, 4:48 PM IST

அரசியல் காரணங்களுக்காக ஏமாற்றக் கூடிய வகையில், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்காக கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் சலுகை என்னும் தீர்மானத்தைக் கொண்டு வந்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

அரசியல் நோக்கத்திற்காகவே தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
அரசியல் நோக்கத்திற்காகவே தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, பட்டியலின மக்களுக்கான பாதுகாப்பு உரிமைகள், இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளை, கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் வழங்கக்கோரி அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

இதற்கு எதிர்ப்புத்தெரிவித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், அவையில் இருந்து வெளியேறி வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “பட்டியலின ஆதி திராவிட சமுதாய மக்களுக்கு, அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்கனவே பட்டியலினத்து மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிற பலனைக் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, அந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாஜக சார்பில் நாங்கள் சில கருத்துகளை முன் வைத்தோம்.

மதம் மாறிய பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் அரசின் இட ஒதுக்கீடு சலுகையை ஆராய்வதற்கு, மத்தியிலே மோடி தலைமையிலான அரசு, 2022ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்த குழு இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அவர்களுக்கு அந்த உரிமை கிடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, அதனுடைய விசாரணை கடந்த வாரம் கூட நடைபெற்றது. மேலும், இது ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இது தொடர்பான விவகாரங்களை மத்திய அரசு மேற்கொண்டு வரும்போது, உச்ச நீதி மன்ற வரம்பில் உள்ள ஒரு விவகாரத்தில், மாநில அரசு ஏன் இந்த தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என பாஜக முன் வைக்கிறது. கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாமியத்திற்கும் மதம் மாறினால் கூட, தொடர்ச்சியாக தீண்டாமை கொடுமை பட்டியல் இன மக்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை இந்த தீர்மானம் மறைமுகமாக சொல்ல வருகிறதா என்று, நாங்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினோம்.

பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக சமூக நீதி அரசு, திராவிட மாடல் அரசு எனக் கூறும் திமுக அரசில், வேங்கை வயல் பிரச்னை, பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான சிறப்புச் சட்டம், ஒவ்வொரு வாரமும் கௌரவக் கொலைகள் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இதனைத் தடுப்பதற்கான சட்டம், இவற்றைப் பற்றி எல்லாம் எதையும் கவலைப்படாத திமுக, முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காகவே இந்த தீர்மானம் கொண்டு வந்துள்ளது என பாஜகவினர் கருதுகிறோம்.

இந்தத் தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். இன்னும் கூட தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு பொதுவான மயானம் கிடையாது. இவை அனைத்தும் மாநில அரசின் விவகார வரம்பில் வரும் நிலையில், அந்த மக்களுக்கு துரோகம் செய்து விட்டு, அரசியல் காரணங்களுக்காக ஏமாற்றக் கூடிய வகையில், வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்காக இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர்.

அடிப்படையில் மதம் மாறுபவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறார்கள்? மதம் மாறினாலும் மக்களுக்கு தீண்டாமை நிலவுகிறது. பட்டியல் இன மக்களுக்கு பொது மாயானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில், இதையெல்லாம் சரி செய்யாமல், கண் துடைப்பிற்காக இதையெல்லாம் இந்த அரசு செய்கிறது என்பதுதான் எங்களுடைய வாதம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் சலுகைகள்: முதலமைச்சர் தனித்தீர்மானம்

ABOUT THE AUTHOR

...view details