தமிழ்நாடு

tamil nadu

பாரிமுனை கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது - அண்ணாமலை கண்டனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 2:27 PM IST

Temple petrol bomb issue: போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித் திரியும் பிரிவினைவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த, திமுக தவறியதன் விளைவுதான் இன்று சென்னை பாரிமுனை அருகே கோயிலுக்குள் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எறியக் காரணம் என அண்ணாமலை திமுக அரசை சாடியுள்ளார்.

bjp annamalai alleges dmk govt for petrol bomb issue in temple
சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு - அண்ணாமலை காட்டம்!



சென்னை:சென்னை பாரிமுனை அருகே கோயிலுக்குள் மது போதையில் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி, தீ வைத்து ஏறிந்த நபரை பேலீசார் கைது செய்தனர். பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் ஸ்ரீ வீரபத்ர சுவாமி தேவஸ்தான கோயில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் கோயில் அர்ச்சகர் கோயிலை திறந்து பூஜைகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கோயில் அருகே ஜிகே டிரேடர்ஸ் என்ற கடை வைத்து நடத்தி வரும் முரளிகிருஷ்ணா என்பவர் சாமி கும்பிட வந்துள்ளார். அதையடுத்து சிறிது நேரத்தில் சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற ஆத்திரத்தில், பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கோயில் உள்ளே சென்று முரளிகிருஷ்ணா வீசியுள்ளார். இதில் உடனடியாக அப்பகுதியில் தீ பற்றிய நிலையில் கோயில் அர்ச்சகர் மற்றும் பக்தர்கள் வெளியே ஓடியுள்ளனர்.

பின்னர், இது குறித்து கொத்தவால்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் கோயில் உள்ளே பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து வீசிய முரளி கிருஷ்ணாவை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசிய நபர் மதுபோதையில் தாக்குதல் நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் முரளிகிருஷ்ணா சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. உரிய விசாரணைக்கு பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தனது X தளத்தில் திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், “சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, இதன் தொடர்ச்சியாக இன்று கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஶ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் கருவறைக்குள்ளே, சுவாமி சிலையின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித் திரியும் பிரிவினைவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த, திமுக தவறியதன் விளைவு, இன்று கோவிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. தீவிரவாதத் தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று மடைமாற்ற முயற்சித்த கையாலாகா திமுக அரசே இதற்கு முழு பொறுப்பு” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஆளுநரின் செயலாளர், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.. தமிழ்நாடு அரசின் வழக்கில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details