தமிழ்நாடு

tamil nadu

சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் வங்கி மேலாளர் பலி

By

Published : Jun 25, 2022, 7:02 AM IST

சென்னை கேகே நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் பெண் வங்கி மேலாளர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தால் மரம் முறிந்து விழுந்து பெண் பலி
மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தால் மரம் முறிந்து விழுந்து பெண் பலி

சென்னை: போரூர் மங்கலம் நகரை சேர்ந்தவர் வாணி கபிலன் (57). இவர் கே.கே நகர் லட்சுமணசாமி சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் தமிழ் எழுத்தாளரும் கூட, பல்வேறு கவிதை தொகுப்பு புத்தகங்களை எழுதி உள்ளார்.

இந்நிலையில் இன்று(ஜூன் 24) மாலை பணி முடிந்தவுடன் தனது காரில் பின்புறத்தில் அமர்ந்துகொண்டு தங்கையான எழிலரசியுடன் வீட்டிற்கு பயணம் செய்துள்ளார். கார் கே.கே நகர் லட்சுமண சாலையில் இருந்து பி.டி.ராஜன் சாலை வழியாக கர்நாடக வங்கி அருகே வந்த போது திடீரென அங்கிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து காரின் பின்பக்கம் விழுந்தது.

இதில் பின்பக்கத்தில் அமர்ந்திருந்த வங்கி மேலாளர் வாணி கபிலன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தங்கை எழிலரசி மற்றும் கார் ஓட்டுனர் கார்த்திக் காயத்துடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து அசோக் நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் வந்து மரத்தை அப்புறப்படுத்தினர்.

இது குறித்து தகவலறிந்த கே.கே நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பலியான வாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த எழிலரசி, கார் ஓட்டுனர் கார்த்திக் கேகே நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த இடத்தில் மழை நீர் வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டி இருந்ததும், இதனால் மரம் சாய்ந்து விழுந்ததும் தெரியவந்துள்ளது. மழை நீர் வடிகாலுக்காக பள்ளம் தோண்டும் போது மரத்தை வெட்டி இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த பாதையில் போக்குவரத்தை தடை செய்திருக்க வேண்டும்.

ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இல்லாததால் விபத்து நிகழ்ந்து இ தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை பள்ளம் தோண்டிய ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பஞ்சலோக சிலைகளை வாங்குவது போல் நடித்து கடத்தல் கும்பலை மடக்கிப்பிடித்த போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details