தமிழ்நாடு

tamil nadu

ஆரூத்ரா மோசடி வழக்கு: ஆர்.கே.சுரேஷ் டிச.10ஆம் தேதி நாடு திரும்பவுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 8:33 PM IST

RK Suresh: ஆரூத்ரா மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் டிசம்பர் 10ஆம் தேதி துபாயிலிருந்து இந்தியா திரும்ப உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரூத்ரா மோசடி வழக்கு
ஆரூத்ரா மோசடி வழக்கு

சென்னை: அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஒபிசி பிரிவு துணைத் தலைவராக உள்ள ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பிருப்பதாக தகவலை சேகரித்தது.

அதன் அடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவினர் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.

இதனிடையே, விசாரணைக்கு ஆஜராகாத ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீசும் பிறப்பித்தனர். இந்த நோட்டீசை திரும்ப பெற உத்தரவிடக்கோரி மற்றொரு வழக்கை தாக்கல் செய்தார். அதில், படத் தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தம்மை அணுகியதாகவும், அது தொடர்பாக மட்டுமே பணப் பரிவர்த்தனை நடந்ததாகவும், ஆரூத்ரா மோசாடிக்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக தற்போது துபாயில் உள்ள நிலையில், நாடு திரும்பினால் கைது செய்யும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே நாடு திரும்பியதும் தாம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதால் அதனை திரும்ப பெற உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.சுரேஷ் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி, டிசம்பர் 10ஆம் தேதி ஆர்.கே.சுரேஷ் நாடு திரும்ப உள்ளதாகவும், இதுதொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நவம்பர் 8ஆம் தேதி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்

இதையும் படிங்க: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்க பாஜக திட்டம்: சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details