தமிழ்நாடு

tamil nadu

கல்லூரிக்கு நேரில் சென்று படித்தவர்களே ஆசிரியர்களாக நியமனம் - மறு ஆய்வு செய்ய நீதிமன்றம் ஆணை!

By

Published : Dec 6, 2022, 5:26 PM IST

Updated : Dec 6, 2022, 6:08 PM IST

கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில், ஆசிரியர்கள் நியமனம் நடைமுறையை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய பள்ளி மற்றும் உயர் கல்வி ஆகிய துறைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களே ஆசிரியர்களாக நியமனம் - மறு ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களே ஆசிரியர்களாக நியமனம் - மறு ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்த நித்யா, ஆங்கில பாடப் பிரிவுக்கான பட்டதாரி ஆசிரியராக தனக்குப் பதவி உயர்வு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “தமிழ் பாடப்பிரிவில் பி.எட் படிப்பை முடித்த பிறகு பி.ஏ.ஆங்கிலம் படித்ததாலும், தொலைதூரக் கல்வி முறையின் கீழ் படித்ததாலும் பதவி உயர்வுக்கு மனுதாரர் தகுதி பெறவில்லை” என தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “தமிழ் பாடத்துக்கான இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு மனுதாரரைப் பரிசீலிக்கலாம். கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது.

தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல. இட ஒதுக்கீட்டின் கீழ் நியமனம் மேற்கொள்வதாக இருந்தாலும் கூட, தகுதியானவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

தற்போது ஆசிரியர்களாக உள்ள பெரும்பாலானோர் கல்லூரிகளுக்கு நேரில் சென்று படிக்காதவர்களாக இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. அகில இந்திய அளவில் கல்வியின் தரத்தில், தமிழ்நாடு 27வது இடத்தில் இருக்கிறது. கல்விக்கு 36,895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், பெருந்தொகை ஆசிரியர்கள் ஊதியத்துக்கே செலவிடப்படுகிறது.

நீதிமன்றத்தின் அழைப்பை ஏற்று நேரில் ஆஜரான தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி தாக்கல் செய்த அறிக்கையில், கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

எனவே ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான திட்டத்தை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறை செயலாளர்களுக்கு உத்தரவிடப்படுகிறது” எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:'சொன்னதைச் செய்யுங்கள்' அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டத்தை துவக்கும் ஆசிரியர்கள்

Last Updated : Dec 6, 2022, 6:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details