தமிழ்நாடு

tamil nadu

விவசாயி, மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் அறிவிப்பு

By

Published : May 7, 2020, 7:36 AM IST

சென்னை: ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் இதர நீர்நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விவசாயிகள் மற்றும் மட்பாண்டம் செய்பவர்கள் விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

Announcement from Government of Tamil Nadu to Farmers and Pottery Workers
Announcement from Government of Tamil Nadu to Farmers and Pottery Workers

தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் போன்ற நீர் கட்டமைப்புகளை மக்கள் பங்களிப்புடன் தூர்வாரி அவற்றின் கொள்ளளவினை மீட்டெடுக்க 2017ஆம் ஆண்டு ‘குடிமராமத்து திட்டம்’ தொடங்கப்பட்டது.

இதனால், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த நீர் ஆதாரங்களில், பருவ மழையின்போது வழக்கத்தை விட நீர் கூடுதலாகத் தேக்கப்பட்டு விவசாயத்திற்கும், குடிநீர்ப் பயன்பாட்டிற்கும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.

மேலும், இந்த நீர்நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விவசாயிகள் மற்றும் மட்பாண்டம் செய்பவர்களுக்கு வழங்கும் பொருட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்பேரில் பொதுப்பணித்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், குடிமராமத்து திட்டத்தின் மூலம், இதுவரை 6 லட்சத்து 69 ஆயிரத்து 900 விவசாயிகளும், மட்பாண்ட தொழில் புரிவோரும் பயன் பெற்றுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கிலிருந்து விவசாயப் பணிகளுக்கு ஏற்கனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோடைக்காலத்தில் பாசனத்திற்கான நீர் திறப்பு நிறுத்தப்பட்டிருப்பதால், விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குத் தேவையான களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விலையில்லாமல் தங்கள் கிராமத்திலோ அல்லது அருகாமை கிராமத்தில் உள்ள ஏரிகள், குளங்களிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்றும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று இதனைப் பின்பற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கரோனாவை ஒழிக்க முடியும்' - முதலமைச்சர் பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details