சென்னை: வேளச்சேரி நேரு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (25). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று முந்தினம் (ஜூன் 30) இரவு 9.30 மணியளவில் கிண்டி மடுவாங்கரை பகுதி அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று பட்டாக்கத்தியுடன் தினேஷை வழிமறித்து தகராறு செய்தனர். பின்னர் ஓட ஓட தினேஷை விரட்டினர்.
கிண்டி வண்டிக்காரன் தெருவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் தப்பிக்க தினேஷ் புகுந்த போதும் இரண்டு பேர் கடைக்குள் புகுந்து அங்கு இருந்தவர்களை கத்தியை காட்டி வெளியே அனுப்பினர். தொடர்ந்து, கடையை விட்டு வெளியே வந்த கடை உரிமையாளர் கடையின் ஷட்டரை மூடி பூட்டிவிட்டு கிண்டி காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற கிண்டி காவல் துறையினர், கடையின் ஷட்டரை திறந்தனர். அப்போது, கடையின் உள்ளே இருந்து கத்தியுடன் கூலாக வெளியேவந்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் தங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால் தாங்கள் அவரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கடையின் உள்ளே சென்ற காவல் துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த திணேஷை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
ஆதம்பாக்கம் பகுதியில் ரவுடி குணா தலைமையில் ரவுடி ராபின்சன், இருளா கார்த்திக் உள்ளிட்டோர் இணைந்து கொலை உள்ளிட்ட கட்டபஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் ரவுடி குணா இதிலிருந்து விலகி ஏரியாவில் ஆட்டோ ஓட்டி திருந்தி வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து ஆதம்பாக்கத்தில் நாகூர் மீரான் கோஷ்டியினருக்கும், ரவுடி ராபின்சன் கும்பலுக்கும் இடையே யார் தாதா என்ற பிரச்னையில் அவ்வப்போது கொலை, அடிதடி போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
கடந்தாண்டு இந்த பிரச்னையில் ரவுடி நாகூர் மீரானை ராபின்சன் கும்பலைச் சேர்ந்தவர்கள் கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் ராபின்சன், சீசி மணி, இருளா கார்த்திக், உதய் உள்பட பலர் கோவை சிறைக்குச் சென்றனர். இதனால், நாகூர் மீரான் கும்பலைச் சேர்ந்தவர்கள், பழிவாங்கும் நோக்கில் ராபின்சனை கொலை செய்ய திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது.