தமிழ்நாடு

tamil nadu

மது போதையில் அட்டகாசம்.. சாலையில் போலீசிடம் ரகளையில் ஈடுபட்ட அமெரிக்க இளைஞர்கள் கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 7:23 PM IST

சென்னையின் முக்கிய சாலையில் மது போதையில் சுற்றித் திரிந்த அமெரிக்க இளைஞர்கள், போலீசார், பொது மக்கள் என அனைவரிடமும் ரகளை செய்து தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

chennai youth atrocities
chennai youth atrocities

சென்னையில் மது போதையில் அமர்க்களம் செய்த அமெரிக்க இளைஞர் கைது!

சென்னை: நுங்கம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நட்சத்திர விடுதியில் 2 அமெரிக்க இளைஞர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது போதை தலைக்கேறியதால் மற்ற வாடிக்கையாளர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். நிதானமற்ற நிலையில் இருந்த 2 அமெரிக்க இளைஞர்களையும், பாதுகாவலர்கள் ஹோட்டலில் இருந்து வெளியேற்றி ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை அடுத்து அந்த இரண்டு அமெரிக்க இளைஞர்களில் ஒருவர் ஜெமினி சிக்னலில், ஆட்டோவில் இருந்து வெளியே குதித்து சாலையில் நடந்து சென்றவர்கள், வாகனத்தில் சென்றவர்கள் என அனைவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் சிலர் பதிலுக்கு அந்த அமெரிக்க இளைஞரை தாக்கி சாலையோர நடைபாதையில் அமர வைத்தனர்.

பின்னர், இது தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த இளைஞரை முதல் உதவி சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்வதற்காக 108 ஆம்புலன்ஸில் ஏற்ற முற்பட்டனர். அப்போது மது போதையில் இருந்த அந்த இளைஞர் வெறி பிடித்தது போல் கத்தி கூச்சலிட்டு மீண்டும் அங்கிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் தாக்கி உள்ளார்.

இதனை கண்ட அவ்வழியாக சென்ற இளைஞர்கள் சிலர் காவலர்களின் உதவியோடு அந்த இளைஞரை மடக்கி பிடித்து கைகள் கட்டப்பட்டு காவல்துறை வாகனத்தில் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மது போதையில் தகராறில் ஈடுபட்ட இரு இளைஞர்களும் அமெரிக்காவை சேர்ந்த அலெக்ஸ் மற்றும் மெல்கார் என்பது தெரியவந்தது.

மேலும், இவர்கள் இருவரும் நுங்கம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்து கொண்டு அளவிற்கு அதிகமாக மது அருந்தியதும், பின்னர் போதை தலைக்கேறியதில் இவ்வாறு நடந்து கொண்டதும் தெரியவந்தது. அமெரிக்க இளைஞர்கள் இருவர் மது போதையில் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:"ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

ABOUT THE AUTHOR

...view details