சென்னை: அத்தியாவசிய உணவுப் பொருள்களில் விலைவாசி உயர்வைக் கண்டித்தும் அதிமுக சார்பில், வரும் 20ஆம் தேதி காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடியா திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற இந்த இரண்டாண்டு காலத்தில், தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
மக்கள் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தும் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பீன்ஸ், அவரைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும்; துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, புளி, சீரகம் உள்ளிட்ட மளிகைப் பொருள்களின் விலைகளும் தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குவதாக வெற்றுத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா அரசு, அதை முறையாக செயல்படுத்தவில்லை. விலைவாசி உயர்வு காரணமாக, சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழவே முடியாத சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலங்களின்போது, இயற்கை இடர்பாடுகளாலும், இன்னும் சில காரணங்களாலும் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வு ஏற்படும் நேரங்களில், அம்மாவின் அரசு தனிக் கவனம் செலுத்தி, அதற்கு ஏற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருள்களை கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டகசாலைகள் மூலமாக மக்களின் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட்டதுடன், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை கட்டுக்குள் வைத்தது அம்மாவின் அரசு.
அதேபோல், இந்த இரண்டாண்டு விடியா ஆட்சியில், தமிழ்நாட்டு மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். வாழவே வழியற்று நிர்கதியாய் நிற்கின்ற மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. தமிழ்நாட்டு மக்கள் 10 ஆண்டுகள் காலமாக மறந்து போயிருந்த மின்வெட்டு, நிர்வாகத் திறனற்ற விடியா அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிறு, குறு தொழில் முனைவோர் செய்வதறியாது கலங்கி நின்ற நேரத்தில், மூன்று மடங்கிற்கும் மேலான மின்கட்டண உயர்வு என்ற பேரிடியை இறக்கியது இந்த விடியா திமுக அரசு.
மனசாட்சியற்ற இந்த விடியா அரசு, கழக அரசு கொடுத்து வரும் இலவச மின்சாரத்தையும் தடுப்பதற்கான முயற்சிகள்; அதைத் தொடர்ந்து சொத்து வரி, வீட்டு வரி 100 விழுக்காடு, கடை வரி 150 விழுக்காடு வரை உயர்வு - இதன் காரணமாக வீட்டு வாடகை உயர்வு; பால் மற்றும் பால் பொருள்களின் விலை உயர்வு; கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு; வெளியூர் செல்லும் பேருந்துகளின் கட்டணம் வானளாவ உயர அனுமதித்தது இந்த விடியா திமுக அரசு.
இது போதாதென்று, விடியா திமுக அரசு, பத்திரப் பதிவுத் துறையில், மக்கள் தங்கள் சொத்துகளை சந்ததியினருக்கு பெயர் மாற்றம் செய்தல், குடியிருப்பதற்கு மனை வாங்குதல், சொத்துகளை அடமானம் வைத்து கடன் பெறுதல் உள்ளிட்ட பதிவுகளுக்கு பல மடங்கு கட்டணங்களை உயர்த்தி, மக்களை மேலும் கடனாளிகளாக ஆக்கப் பார்க்கிறது. திறனற்ற விடியா திமுக அரசின் ஆட்சிக் காலத்தில், அனைத்துத் துறைகளும் ஊழல்மயப்படுத்தப்பட்டு நாட்டின் ஜனநாயகம் கேலிப் பொருளாக்கப்பட்டு மக்கள் வாழ்வு சீரழிக்கப்படுகிறது” என விமர்சித்தார்.