சென்னை: தீபாவளி பண்டிகை நேற்று (நவ.12) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மேலும் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளும், அறிவுரைகளும் சென்னை காவல்துறை சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, தீபாவளி பண்டிகை அன்று உச்ச நீதிமன்றத்தினுடைய அறிவுறுத்தலின்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்கப்பட வேண்டும் மற்றும் விற்கப்படும் வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியிருந்தது. மேலும், பொதுமக்கள் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் ஆகிய 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று ஏற்கனவே நேரக் கட்டுப்பாட்டை அறிவித்திருந்தது.
ஆனால், தீபாவளிக்கு முந்தைய நாளே பொதுமக்கள் பட்டாசு வெடிக்கத் தொடங்கினர். தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு முதலே சென்னையில் அதிகமாக பட்டாசு வெடித்ததன் காரணத்தினால், தீபாவளி அன்று காலை முதலே சென்னையில் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. அரசினுடைய அறிவுறுத்தலின்படியும், தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரங்களில் அனைவரும் பட்டாசு வெடிக்க தொடங்கியதையடுத்து, சென்னையில் காற்று மாசு மேலும் அதிகரித்து காணப்பட்டது.