தமிழ்நாடு

tamil nadu

நடிகை கெளதமி அளித்த நில மோசடி புகார்.. அதிரடியாக 6 பேர் கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 9:17 PM IST

Actress Gauthami Land issue: நடிகை கௌதமி நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்த வழக்கில் கேரள மாநிலம் திருச்சூரில் தலைமறைவாயிருந்த 6 பேரையும் கைது செய்த போலீசார், நாளை (டிச.22) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை கெளதமி
நடிகை கெளதமி

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் வசித்து வரும் நடிகை கெளதமி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், “திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் சுமார் 10.30 ஏக்கர் நிலத்தினை விற்றுத் தருவதாகக் கூறி உதவியாக இருந்த அழகப்பன் என்பவர் மூலம் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பலராமன், செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ரகுராமன் ஆகியோர் பொது அதிகாரம் பெற்றனர்.

அதன் பிறகு அந்த இடத்தையும், அருகிலிருந்த எனக்குச் சொந்தமான மற்ற இடங்களையும் சேர்த்துக் கடந்த 2015 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் விற்பனை செய்து, எனக்கு அதில் 4.10 கோடி ரூபாய் பணம் கொடுத்தனர். அதன் பிறகு வருமான வரித்துறையிலிருந்து வந்த நோட்டீஸில், எனக்குச் சொந்தமான நிலத்தை 11 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு வெறும் 4.10 கோடி ரூபாய் மட்டும் கொடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனக்கு நெருக்கமாக இருந்ததால் அவர்களை நம்பி எனக்கு பல்வேறு இடங்களில் இருக்கும் சொத்துகளையும் கவனித்துக் கொள்ள ஒப்படைத்தேன். ஆனால் அழகப்பன் அவரின் குடும்பத்தினருடன் சேர்ந்து எனது சொத்துக்களை ஏமாற்றி 25 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது பின்பு தான் தெரியவந்தது” என குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து நில மோசடி புகார் தொடர்பாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழகப்பன் அவரது மனைவி நாச்சியம்மாள் மற்றும் குடும்பத்தினர் ஆறு பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சியம்மாள் உட்பட ஆறு பேருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆறு முறை சம்மன் அனுப்பியும் இதுவரை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர்.

அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான மதுரை, சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட ஐந்து இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு ஆவணங்களைக் கைப்பற்றி அதனை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய பலராமன் என்பவரை மட்டும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களுக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு ஆவணங்கள் பணம் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர். மேலும், இவர்கள் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மற்றவர்களையும் பிடிப்பதற்காகச் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்துத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கேரளா மாநிலம் திருச்சூரில் வைத்து அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சியம்மாள் உறவினர் சதீஷ் உள்ளிட்ட ஆறு பேரையும் மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட ஆறு பேரைக்கும் டிரான்சிட் வாரண்ட் பெற்று சென்னை அழைத்து வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் நாளை (டிச.20) அவர்கள் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:சனாதனம் குறித்துப் பேசிய அமைச்சர்கள் மீதான கோ-வாரண்டோ மனு - தீர்ப்பிற்காக வழக்கை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்..!

ABOUT THE AUTHOR

...view details