தமிழ்நாடு

tamil nadu

நீ ஜெயிச்சுட்ட மாறா..! திரைத்துறையில் சூர்யாவின் 26 ஆண்டுகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 1:15 PM IST

26 Years of Suriya: திரைத்துறையில் 26 ஆண்டுகளை நிறைவு செய்தார் நடிகர் சூர்யா. 1997-ல் 'நேருக்கு நேர்' திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அன்று சரவணனாக இருந்தவர் இன்று சூர்யாவாக மாறியுள்ள மாற்றம் வியக்கத்தக்கது.

26 Years of suriya
திரைத்துறையில் 26 ஆண்டுகளை நிறைவு செய்தார் நடிகர் சூர்யா

சென்னை: 'நேருக்கு நேர்' படத்தில் முதலில் அஜித் தான்‌ நடித்தார் என்று அனைவரும் அறிந்ததே. வசந்த் இயக்கிய அப்படத்தில் மற்றொரு நாயகனாக நடித்தவர் விஜய். அஜித்திடம் இயக்குனர் வசந்த் கதையே சொல்லாமல் நேருக்கு நேர் படத்தை இயக்கி வந்தார். இது அஜித்துக்கு பிடிக்கவில்லை இதனால் அப்படத்தில் இருந்து அஜித் விலகினார் என்று அப்போது செய்திகள் வெளியானது. இதனால் தர்ம சங்கடத்திற்கு ஆளானார் இயக்குனர் வசந்த்.

காரணம், 'ஆசை' படத்தின் மிகப் பெரிய வெற்றியால் அஜித்திடம் கதை சொல்லாமல் படத்தை இயக்கி வந்தார். இப்போது அஜித் விலகவே என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த இயக்குநர் வசந்த் மீண்டும் நடிகர் சிவக்குமார் வீட்டிற்கு சென்று சூர்யாவை நடிக்க கேட்டார்.

ஏனென்றால் ஏற்கனவே ஆசை படத்தில் சூர்யாவைத்தான் நடிக்க கேட்டார் வசந்த். அப்போது அவர் மறுத்துவிட்டார். இம்முறை சிவக்குமார் சொன்னதன் பேரில் நடிக்க ஒப்புக் கொண்டார் சூர்யா. "நானெல்லாம் சினிமாவில் நடிக்க மிகப் பெரிய கஷ்டப்பட்டேன் ஆனால் உனக்கு அதுவாக தேடி வருகிறது. நீ வேண்டாம் என்று சொல்வது பல பேரின் கனவுடா" என்று சிவக்குமார் சொல்ல சூர்யா சரி என்று சொல்லிவிடுகிறார். அப்போது சூர்யாவின் வயது 22

அப்போது இப்படத்திற்கு வைத்த பெயர்‌ 'மனசுக்குள் வரலாமா' மணிரத்னம் தான்‌ இப்படத்திற்கு தயாரிப்பாளர் அவர்தான் படத்தின் பெயரை 'நேருக்கு நேர்' என்று மாற்றினார்.‌ அதேபோல் சரவணன் என்ற‌ பெயரை சூர்யா என்று மாற்றியதும் அவர்தான். அவரது 'தளபதி' படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் சூர்யா. இதனை கேட்ட சிவக்குமாரும் அகம் மகிழ்ந்தார்.

ஆனால், சூர்யா அப்போது மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தார். இதனால் படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநர் வசந்திடம் நிறைய திட்டு வாங்குவார். கூட நடிப்பது சிம்ரன், சூர்யாவுக்கு நடனமும் வராது இதனால் எங்கெங்கே என்ற பாடலை சூர்யாவை ஓடவிட்டும் நடக்கவிட்டும் எடுத்திருப்பார்கள். இதனால் மனமுடைந்த சூர்யா, இனி நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் கார்மென்ட்ஸ் பிஸினஸ் செய்யப்போகிறேன் என்று படப்பிடிப்பு தளத்தில் எல்லோரிடமும் சொல்லியுள்ளார்.

ஒருவழியாக படம் வெளியாகி வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா ஆகிய படங்களில் நடித்தார். அந்த சமயங்களில் தன்னம்பிக்கையின்மை, வசனங்களை மனப்பாடம் செய்வதில் சிரமம், சண்டை, நடனம் ஆடத் தெரியாதது என நிறைய கஷ்டப்பட்டார். அப்போது நடிகர் ரகுவரன் தான் சூர்யாவிடம், "உனக்கு என்று ஒரு தனிவழியை உருவாக்கு அப்பாவின் நிழலில் இருக்காதே" என்று அறிவுரை கூறியுள்ளார்.

அதன்பிறகு மீண்டும் வசந்த் இயக்கத்தில் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' என்ற படத்தில் நடித்தார். அதில் இவரது நடிப்பும் தன்னம்பிக்கையும் பேசப்பட்டது. பின்னர்தான் சிறந்த இயக்குநரான பாலாவின் இயக்கத்தில் 'நந்தா' படத்தில் நடித்தார். அப்படத்தில் சூர்யாவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயினர். சூர்யாவின் நடிப்பு 'நந்தா' படத்தில் வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கும். அதன் பிறகு சூர்யாவின் வளர்ச்சி மிகப் பெரிய அளவில் இருந்தது. தன்னிடம் இருந்த குறைகளை மெல்ல மெல்ல திருத்திக்கொண்டு அதில் வல்லவராகவும் தன்னை உருமாற்றிக்கொண்டார். இதுதான் சூர்யாவின் தன்னம்பிக்கை.

நடிப்பே வராது என்று கூறப்பட்ட சூர்யாவின் படமான 'சூரரை போற்று' ஆஸ்கர் மேடை வரை சென்றது. இன்று சூர்யாவின் நடிப்புக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. வாரணம் ஆயிரம், சூரரைப் போற்று, ஜெய்பீம், கஜினி, அயன் என தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் சூர்யாவின் மகுடத்தை அலங்கரித்தன.

தற்போது சூர்யா நடிப்பில் 'கங்குவா' என்ற படம் உலகமே வியக்கும் வகையில் உருவாகி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து மொழிகளையும் 'கங்குவா' வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பூஜ்ஜியத்தில் தொடங்கி புகழின் உச்சம் தொட்ட நடிகர் சூர்யா, திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 26 ஆண்டுகள் கடந்துவிட்டது. நாமும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க:வெளியானது முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தின் டிரைலர்!

ABOUT THE AUTHOR

...view details