சென்னை: தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 69-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிகவும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் நடித்த கர்ணன், சூர்யாவின் ஜெய்பீம், பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை, சமுத்திரக்கனி இயக்கிய விநோதய சித்தம், மாநாடு உள்ளிட்ட படங்களுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக கர்ணன், ஜெய்பீம், சார்பட்டா படங்களுக்கு விருது கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே போல் கடந்த ஆண்டு சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஐந்து விருதுகளை அள்ளியது. 68-வது தேசிய விருது விழாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற சூர்யா, இம்முறை ஜெய் பீம் படத்திற்காக அவ்விருதை மீண்டும் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிறந்த துணை நடிகர் விருது மணிகண்டனுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதே பட்டியலில் தனுஷ், ஆர்யா, சிம்பு உள்ளிட்டோரும் போட்டியில் உள்ளனர்.