தமிழ்நாடு

tamil nadu

கள்ளச்சாராய விற்பனைக்கு கூட வங்கிக் கடனா? - தனியார் நிதி நிறுவனம் பெயரில் பெண் பேசிய ஆடியோ!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 7:37 PM IST

Updated : Oct 1, 2023, 7:54 PM IST

bank loan fraud: தொழில் கடனுக்கு நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செல்போனில் தனியார் நிறுவனத்தின் பெயரில் தொடர்பு கொண்ட பெண்ணிடம், நபர் ஒருவர் கள்ளச்சாராய விற்பனை தொழில் செய்வதாக கூறிய பின்னரும் அந்த பெண் ஆண்டு வருவாய் தொடர்பான ஆவணங்கள் உள்ளதா என்று கேட்கும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

நபரிடம் பெண் பேசிய ஆடியோ

செங்கல்பட்டு: உலகப் பொருளாதார மயமாக்கல் என்பது இரு பக்கமும் கூர்முனை உள்ள கத்தி என்று பல தருணங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 10, 20 வருடங்களுக்கு முன்னதாக நாம் கடன் வாங்க வேண்டி இருந்தால் நம்மைப் பற்றி முற்றிலும் அறிந்த அக்கம் பக்கத்தினரிடம் 'கைமாற்று' என்ற பெயரில் வட்டி இல்லாக் கடன் வாங்குவோம்.

நம்மைப் பற்றியும் நம் முன்னோர்கள் பரம்பரை பற்றியும் அறிந்தவர்கள், எந்த வித பிணையமும் இல்லாமல், வட்டி போன்ற எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், நம்பிக்கையின் பெயரில் மட்டுமே சிறு தொகையைக் கடனாக அளித்து உதவி செய்து வந்தனர். அதன் பின்னர், முக அறிமுகம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், சிறு தொகையை வட்டியாகக் கேட்டு நம்பிக்கையின் அடிப்படையில் கடன் கொடுத்து வாங்கி வந்தனர்.

உலகப் பொருளாதாரச் சூழல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் மாறிய பிறகு, நண்பர்கள், உறவினர்கள் நமக்குத் தெரிந்த சிறு, குறு கடைக்காரர்கள் என்பவர்கள் கடன் கொடுப்பது என்பது முற்றிலும் ஒழிந்தது. இதற்கு அடுத்தப்படியாக, சாமானியர்களின் புகலிடமாக வங்கிகள் இருந்தன. வங்கிகளும் குறிப்பிட்ட அளவு வட்டிக்குக் குறிப்பிட்ட அளவுத் தொகையைக் கடனாக அளித்து வந்தன. இதற்கான நீண்ட நடைமுறைகள், தேவையற்ற அலைக்கழிப்புகள் போன்றவை, சாமானிய மக்களை வங்கிகள் பக்கம் கடன் வாங்கச் செல்ல விடாமல் தடுத்தன என்பது நிதர்சனமான உண்மை.

இதையும் படிங்க:'சதுரங்க வேட்டை' பட பாணியை மிஞ்சிய பண மோசடி.. நூதன திருட்டில் ஈடுபட்டவர் சிக்கியது எப்படி?

இதனிடையே, இணையதளப் பரிமாற்றம், இணையதள சேவைகள், குறிப்பாக ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள், அதில் பயன்படுத்தப்படும் செயலிகள் என வந்த பிறகு, கடன் வாங்குவது, கடன் கொடுப்பது என்பதே புது பரிமாணம் எடுத்தது. உங்கள் ஆண்ட்ராய்டு போன்களை கண்காணிக்க மற்றும் கட்டுப்படுத்த எங்களுக்கு அனுமதி அளியுங்கள் என்று ஒரே ஒரு செய்தியை மட்டும் நமக்கு அனுப்பிவிட்டு, நமக்குத் தெரிந்தும், தெரியாமலும், அறிந்தோ, அறியாமலோ அனுமதி அளிக்கிறோம் சில செயலிகள் நம்மிடம் அனுமதியும் பெறாமல் நம் ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள தொலைப்பேசி தொடர்புகள், புகைப்படங்கள், நம்முடைய சொந்த விஷயங்கள், போன்றவற்றைச் சேகரித்து வைத்துக் கொள்கின்றன.

அதன் பின்னர், நம்முடைய தரவுகளை எடுத்துக் கொள்ளும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ அல்லது சம்பந்தமே இல்லாத வேறு சில நிறுவனங்களோ, நம்மைத் தொடர்பு கொண்டு உங்களுக்கு இலட்சக்கணக்கில் கடன் கொடுக்க நாங்கள் ரெடி என்று வலை விரிக்கின்றனர். நாம் பிரமித்துப் போய் நிற்கும் போது, நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்று சம்பிரதாயத்துக்குக் கேட்கின்றனர். ஆனால், நாம் செய்யும் தொழில் சட்டத்துக்கு உட்பட்டதா, சட்டத்துக்குப் புறம்பானதா என்பது பற்றிய சிறு அறிவு கூட அந்த செயலிகளை இயக்குபவர்களுக்கு கிடையாது.

இதையும் படிங்க:போலீஸ் என கூறி ரூ.15 ஆயிரம் மோசடி.. பெண்கள் அறைக்குள் சென்ற காவலாளி கைது.. உள்ளிட்ட சென்னை கிரைம் செய்திகள்!

சமீபத்தில் ஒருவருக்குத் தனியார் நிதி நிறுவனத்திலிருந்து 30 முதல் 40 லட்சம் வரை தொழிற்கடன் கொடுக்க தயாராக உள்ளோம் என தொலைப்பேசி அழைப்பு வருகிறது. அதற்கு அந்த நபர் என்னுடைய எண் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்கிறார். அதற்கு அவர்கள் எங்கள் நிதி நிறுவன செயலியில், நீங்கள் கடன் கேட்டுப் பதிவு செய்துள்ளீர்கள் என்று பதில் கூறுகிறார். உடனே சம்பந்தப்பட்டவர், என்ன தொழிலுக்கு நான் கடன் கேட்டுள்ளேன் என்று பதில் கேள்வி கேட்கிறார்.

நிதி நிறுவனம் சார்பில் பேசும் பெண், உங்கள் பெயர் மற்றும் விலாசம் மட்டுமே எங்களிடம் உள்ளது. நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்று மீண்டும் கேட்கிறார். அதற்கு, சம்பந்தப்பட்ட நபர் நான் கள்ளச்சாராயம் விற்பனை செய்கிறேன் அதற்குக் கடன் உதவி செய்வீர்களா? என்று கேட்கிறார். அதிலும் அசராத அந்தப் பெண், கள்ளச்சாராயம் விற்பனை செய்கிறீர்களா உங்களுடைய டர்ன் ஓவர் என்ன என்று கேட்கிறார். அதற்கு, சாட்சியாக உங்கள் பேங்க் ஸ்டேட்மெண்ட்டை கொடுங்கள் என்றும் கேட்கிறார்.

அழைப்பு வந்த அந்த நபர், நான் தமிழ்நாடு அரசாங்கத்திடம் அனுமதி பெற்று கள்ளச்சாராயம் விற்கிறேன். ஒரு லிட்டர் கள்ளச்சாராயம் என்பது முப்பது ரூபாய் என்ற அளவுக்கு விற்கும் இதுவே என்னுடைய மாதாந்திர விற்பனை' என்று பேச முற்படும் பொழுது சுதாரித்துக் கொண்டு அந்த பெண்மணி தொலைப்பேசி அழைப்பைத் துண்டிக்கிறார்.

கள்ளச்சாராய விற்பனைக்கு எல்லாம் கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவன செயலிகளிடம், அப்பாவிகளும் பொதுமக்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

இதையும் படிங்க:க்யூஆர் கோடை மாற்றி ரூ.17 லட்சம் மோசடி செய்த கடை ஊழியர்.. தேனியில் பரபரப்பு!

Last Updated :Oct 1, 2023, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details