தமிழ்நாடு

tamil nadu

18 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 9:27 AM IST

மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் கும்பாபிஷேகம், 18 ஆண்டுகளுக்குப் பின்னர் நடை பெற உள்ளது, பக்தர்கள் இடையே பரவசத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்
மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் தீவிரம்

செங்கல்பட்டு: மதுராந்தகம் பகுதியில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற ஏரிகாத்த ராமர் கோயில். இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இந்த கோயில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். சுகர், விபகண்டர் போன்ற தவம் புரிந்த இந்த திருத்தலம், மதுராந்தக சோழனால் அந்தணர்களுக்கு மானியமாக அளிக்கப்பட்ட இடம் என்கிறது வரலாறு.

அதே சமயம், ராமபிரான் இலங்கையில் இராவணனோடு போரிட்டு வெற்றி கொண்டு, சீதையை மீட்டுக் கொண்டு அயோத்தி திரும்பும் வழியில், மதுராந்தகத்தில் உள்ள இந்தத் திருத்தலத்தில் தம்பதி சமேதரராக தங்கினார் என்கிறது, புராணம்.

1795 - 98 காலகட்டத்தில், இப்பகுதியில் பெய்த பெருமழை காரணமாக ஏரி உடையும் நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது இங்கு நிர்வாகத்தைக் கவனித்து வந்த கர்னல் பிளேஸ் என்பவர் செய்வதறியாது திகைத்த போது, ஏரி உடையாமல் காத்தருளிய ராமபிரான், கர்னலின் கண்களுக்கும் ராமர் காட்சி அளித்தார் எனவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே, மதுராந்தகம் கோதண்டராமர் 'ஏரிகாத்த ராமர்' என்ற புகழுடைய பெயரை அடைந்தார். இந்தக் கோயிலில் கடந்த 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் தற்போது 18 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதால் பக்தர்கள் பரவசத்தில் உள்ளனர்.

இது தொடர்பாக, கோயிலின் மூத்த அர்ச்சகர் சேஷாத்ரி கூறும் போது, ''இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வையில் இந்த ஆலயத்திற்கான கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பழமை மாறாமல் கோயிலை புனரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பூச்சு வேலைக்கு சிமெண்ட் பயன்படுத்தாமல், பண்டைய முறைப்படி கடுக்காய், சுண்ணாம்பு, வெல்லம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட கலவையை கொண்டு கோயிலின் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொல்லியல்துறை வழிகாட்டுதலின் படி, இங்குள்ள ராஜகோபுரம், தாயார் மற்றும் அனுமன் உள்ளிட்ட சந்நிதிகளின் விமானங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி காத்த ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் அனைத்து தரப்பினரையும் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. அனைத்து புனரமைப்பு பணிகளும் முடிந்து இந்த வருடம் ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: இன்சூரன்ஸ் பணத்தைப் பெற நண்பனைக் கொலை செய்து நாடகமாடியவர் கைது..! சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவம்..!

ABOUT THE AUTHOR

...view details