அரியலூர்:தமிழ்நாடு முழுவதும் பன்னிரென்டாம் வகுப்பு (பிளஸ் 2) பொதுத் தேர்வுகள் நேற்று தொடங்கப்பட்டது. முதல் தேர்வில் வினாக்கள் எளிதாகக் கேட்கப்பட்டு மாணவர்களும் நன்றாகத் தேர்வை எழுதி முடித்தனர். அதைத் தொடர்ந்து, அடுத்த தேர்விற்குப் படிப்பதற்காக இன்று பிளஸ் 2 தேர்வர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாகத் தமிழ்நாடு முழுவதும் பதினொன்றாம் (பிளஸ் 1) வகுப்பு மாணவர்களுக்கு இன்று காலை பொதுத் தேர்வுகள் தொடங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தமாக 90 பள்ளிகளைச் சேர்ந்த 8,370 மாணவ மற்றும் மாணவிகள் 44 தேர்வு மையங்களில் பிளஸ் 1 தேர்வை எழுதி வருகின்றனர். இந்த நிலையில் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திடீரென்று பார்வையிட வருகை புரிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தி வாழ்த்து தெரிவித்தார்.
தற்போது, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு அரசு விழாக்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர் மற்றும் அரியலூர் மாவட்ட எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் வகையில் முன்னதாகவே அரியலூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர் உள்ளிட்டோர் வந்து சேர்ந்துள்ளனர்.