ஹாங்சோ: ஹாங்சோவில் நடந்து வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று (அக்.3) நடைபெற்ற ஆடவருக்கான கேனோ இரட்டையர் 1000 மீட்டர் போட்டியில் (men's canoe double 1000m event) இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றது. இந்த ஆண்களுக்கான கேனோ இரட்டையர் 1000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்தியாவின் அர்ஜுன் சிங் (Arjun Singh) மற்றும் சுனில் சிங் (Sunil Singh) ஜோடி 3:53.329 நிமிடங்களில் இலக்கை கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றது.
இதற்கிடையில், உஸ்பெகிஸ்தானின் ஷோக்முரோட் கோல்முராடோவ் (Shokhmurod Kholmuradov) மற்றும் நூரிஸ்லோம் துக்தாசின் உக்லி (Nurislom Tukhtasin Ugli) ஆகியோர் 3:43.79 நிமிடங்களில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றனர். கஜகஸ்தானின் டிமோஃபி யெமிலியானோவ் (Timofey Yemelyanov ) மற்றும் செர்ஜி யெமிலியானோவ் (Sergey Yemelyanov) ஆகியோர் 3:49.991 நிமிடங்களில் இலக்கை கடந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றனர்.
முன்னதாக, ஆடவர் கேனோ ஒற்றையர் 1000 மீட்டர் இறுதிப் போட்டியில் நிரஜ் வர்மா 4:36.314 நிமிடங்களில் இலக்கை கடந்து ஏழாவது இடத்தைப் பிடித்து பதக்கத்தை தவறவிட்டார். இதனை அடுத்து, இந்திய விளையாட்டு ஆணையம் (SAI - Sports Authority of India) தனது 'X' பக்கத்தில், "ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான கேனோ இரட்டையர் 1000 மீட்டர் போட்டியில் 3.53.329 நிமிடங்களில் இலக்கை கடந்து வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளனர். நமது இந்திய வீரர்களை ஊக்குவிப்போம்" என்று பதிவிட்டுள்ளது.