தமிழ்நாடு

tamil nadu

காமன்வெல்த் 2022: ஒரே நாளில் 2 தங்கம்; 2 வெள்ளி

By

Published : Aug 3, 2022, 10:14 AM IST

காமன்வெல்த் 2022 தொடரில் லான் பால் விளையாட்டில் இந்தியா முதன்முறையாக தங்கம் வென்றுள்ளது. மேலும், டேபிள் டென்னிஸில் இந்திய ஆடவர் அணியும் தங்கம் வென்றுள்ளது. பளுதூக்குதல், பேட்டமிண்டன் ஆகியவற்றில் இரண்டு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று, மொத்தம் 13 பதக்கங்களுடன் இந்தியா 6ஆவது இடத்தில் உள்ளது.

COMMONWEALTH 2022 DAY 5 HIGHLIGHTS OF INDIA
COMMONWEALTH 2022 DAY 5 HIGHLIGHTS OF INDIA

பர்மிங்ஹாம்: 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.

இத்தொடரின் ஐந்தாம் நாளான நேற்று (ஆக. 2) இந்தியா சார்பில் லான் பால், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், வட்டு எறிதல், ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

லான் பால்: காமன்வெல்த் தொடர் வரலாற்றில் இந்தியா முதன்முறையாக மகளிர் லான் பால் விளையாட்டின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது. இப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், இந்தியாவுடன் தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை நடத்தியது.

இதில், இந்திய வீராங்கனைகள் ரூபா ராணி டிர்கி, நயன்மோனி சைகியா, லவ்லி சௌபே மற்றும் பிங்கி சிங் ஆகியோர் விளையாடினர். போட்டி முடிவில், இந்தியா 17-10 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கதை வென்றது. லான் பால் விளையாட்டில், இந்தியாவின் முதல் பதக்கமாக தங்கம் கிடைத்துள்ளது.

டேபிள் டென்னிஸ்: இந்தியா இத்தொடரின் ஆரம்பத்தில் இருந்தே டேபிள் டென்னிஸ் போட்டியில் கடும் ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. நேற்று நடைபெற்ற ஆடவர் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய அணி, சிங்கப்பூரை சந்தித்தது. இதில், இந்தியா 3-1 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி 5ஆவது தங்கத்தை வென்றது.

பளுதூக்குதல்:இந்திய அணி பளு தூக்குதலில் மட்டும் 6 பதக்கங்களை இதுவரை பெற்றுள்ளது. இந்நிலையில், நேற்று பளு தூக்குதல் ஆடவர் 96 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியாவின் விகாஸ் தாக்கூர், ஸ்னாட்ச் மற்றும் கிளீன் & ஜெர்க் ஆகியவற்றில் மொத்தம் 346 கிலோ பளுவை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

பேட்மிண்டன்: நேற்றைய இந்தியாவின் பதக்க வேட்டையில், கடைசி வேட்டையாக பேட்மிண்டன் அமைந்தது. பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில், மலேசிய அணியிடம் தோல்வியைடந்தாலும் வெள்ளிப் பதக்கத்தை இந்தியா வென்றது.

ஸ்குவாஷ் & வட்டு எறிதல்:ஸ்குவாஷ் அரையிறுதியில், இந்தியாவின் சௌரப் கோஷல் நியூசிலாந்தின் பால் கோலிடம் தோல்வியுற்றார். வட்டு எறிதல் மகளிர் பிரிவு போட்டியில் இந்தியாவின் நவ்ஜீத் கௌர், சீமா புனியா ஆகியோர் பங்கேற்றனர். சீமா புனியா 5ஆவது இடத்தையும், நவ்ஜீத் கௌர் 8ஆவது இடத்தையும் பிடித்து வெளியேறினர்.

பதக்கப்பட்டியலில் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் 6ஆவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 42 தங்கங்களுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 31 தங்கங்களுடன் 2ஆவது இடத்திலும், நியூசிலாந்து 13 தங்கங்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளன.

இதையும் படிங்க:வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டி - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

ABOUT THE AUTHOR

...view details