சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஐந்தாவது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் பந்து வீச முடிவெடுத்தது. இதனைத் தொடர்ந்து, களம் இறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை கொல்கத்தா அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் (52) ரன்களும், ரோஹித் சர்மா 43 ரன்களும் சேர்த்தனர். இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பில் நிதிஷ் ராணா, சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான தொடக்கம் தந்த இந்த ஜோடியில் சுப்மன் கில் 24 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 5 பந்துகளில் 5 ரன்னிலும், கேப்டன் இயான் மோர்கன் 7 பந்துகளில் 7 ரன்னிலும், தனது அரைசதத்தை பதிவு செய்திருந்த நிதிஷ் ராணா 47 பந்துகளில் 57 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 9 பந்துகளில் 9 ரன்னிலும் சேர்த்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக தினேஷ் கார்த்திக், ஆண்ரே ரசல் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ரசல் 15 பந்துகளில் 9 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார்.