மும்பை:நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேற்று (மே 8) நவி மும்பையில் உள்ள டி.ஓய். பாட்டீல் மைதானத்தில் மோதின. போட்டியில் டாஸை இழந்த சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து, 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டேவான் கான்வே 87 ரன்களை எடுத்தார். டெல்லி பந்துவீச்சில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பவர்பிளேவிற்கு பின் பரிதாபம்: 209 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கம் சற்று ஆறுதலாகவே அமைந்தது. ஸ்ரீகர் பாரத், வார்னர் ஆகியோர் பவர்பிளே ஓவர்களிலேயே ஆட்டமிழந்தாலும், மிட்செல் மார்ஷ், கேப்டன் பந்த் சற்று ஆறுதல் அளித்தனர். ஆனால், பவர்பிளே முடிந்தபின்னர் அந்த அணியின் விக்கெட்டுகள் கடகடவென சரியத் தொடங்கின.
ஒரு கட்டத்தில், டெல்லி அணி 72/2 என்ற நிலையில் இருந்து, 99/8 என்று தலைகீழாக மாறியது. அதாவது, ஏறத்தாழ 7 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகளை வரிசையாக இழந்து வெறும் 27 ரன்களை மட்டுமே எடுத்தது. இறுதிக்கட்டத்தில், ஷர்துல் தாக்கூர் சற்று ஆறுதல் அளித்தாலும், டெல்லி பின்வரிசை பேட்டர்கள் பெவிலியனுக்கு தொடர்ந்து அணி வகுந்தனர்.