தமிழ்நாடு

tamil nadu

IPL 2021: டெல்லி அணிக்கு 137 ரன்கள் இலக்கு; ராயுடு அரைசதம்

By

Published : Oct 4, 2021, 10:07 PM IST

டெல்லி - சென்னை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராயுடு அரைசதத்தால் சென்னை அணி 136 ரன்களை எடுத்துள்ளது.

IPL 2021
IPL 2021

துபாய்: கரோனா காரணமாக பாதியில் ரத்துசெய்யப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம்கட்டப் போட்டிகள் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கின.

இந்நிலையில், 50ஆவது லீக் ஆட்டத்தில், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இன்று (அக். 4) மோதுகிறது.

திணறல்

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இதன்படி, சென்னை அணியில் ருதுராஜ், டூ ப்ளேசிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்களில் இந்த இணை 26 ரன்களை எடுத்தது. ஆனால், மூன்றாவது ஓவரில் டூ பிளேசிஸ் 10 (8) ரன்களுக்கும், ஐந்தாவது ஓவரில் ருதுராஜ் 13 (13) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

தோனி - ராயுடு ஜோடி

பவர்பிளே முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்களை எடுத்தது. அக்ஸர் படேல் வீசிய எட்டாவது ஓவரில் மொயின் அலி 5 (8) ரன்களிலும், அஸ்வினின் அடுத்த ஓவரில் உத்தப்பா 19 (19) ரன்களிலும் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.

இதன்பின்னர், அம்பத்தி ராயுடு உடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். அப்போது, சென்னை 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களை எடுத்து தடுமாறிக்கொண்டிருந்தது.

இதை கவனத்தில் கொண்டு இந்த ஜோடி, மிக பொறுமையாக ரன்களை சேர்த்தது. 17 ஓவரில் தான் சென்னை அணி, 100 ரன்களை கடந்தது.

ராயுடு அதிரடி

அப்போது சற்று அதிரடியைத் தொடங்கிய ராயுடு, ஆவேஷ் கானின் 18ஆவது ஓவரில் 14 ரன்களை குவித்தார். நோர்க்கியாவின் அடுத்த ஓவரிலும் சிக்ஸர், பவுண்டரி என விளாசிய ராயடு, தான் சந்தித்த 40ஆவது பந்தில் அரைசதத்தை பதிவுசெய்தார்.

மறுமுனையில், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி 18 (27) ரன்களில் ஆட்டமிழக்க, சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை எடுத்தது.

ராயுடு 55 (43) ரன்களுடனும், ஜடேஜா 1 (2) ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர். டெல்லி அணி பந்துவீச்சில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான், நோர்க்கியா, அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

டெல்லி சுழல் கூட்டணி

அக்சர் படேல், அஸ்வின் ஆகியோர் இணைந்து 8 ஓவர்கள் வீசி 38 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது. மேலும், இவர்கள் பவுண்டரியோ, சிக்ஸரோ விட்டுக்கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, பேட்டிங்கைத் தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 ஓவர்களுக்கு 51/2 என்ற நிலையில் தொடர்ந்து விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி

ABOUT THE AUTHOR

...view details