டிரினிடாட் மற்றும் டொபாகோ:இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் தொடரை ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வைட்-வாஷ் செய்தது.
இந்நிலையில், டி20 தொடரின் முதல் போட்டி டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவின் சான் ஃபெர்னான்டோ நகரில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (ஜூலை 29) இரவு 8 மணியளவில் நடைபெறுகிறது.
இந்திய அணியில், ஒருநாள் தொடரின்போது ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இந்திய டி20 அணியுடன் இணைந்துள்ளனர். இந்திய அணியின் ஓப்பனிங்கில் ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷன் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இல்லையெனில், இங்கிலாந்து தொடரை போன்று ரிஷப் பந்த் ஓப்பனராக களமிறக்கப்படலாம்.
மிடில் ஆர்டர் தலைவலி: விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், மூன்றாவது வீரராக ஸ்ரேயாஸ் ஐயரும், அடுத்து சூர்யகுமார், ஹர்திக் களமிறங்குவார்கள் எனத்தெரிகிறது. தொடர்ந்து மிடில் ஆர்டரில் மற்றொரு வீரரை தேர்வு செய்வதுதான் ரோஹித் - ராகுலுக்கு தலைவலியாக இருக்கும்.
மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிரட்டிய தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது புரியாத புதிர்தான். மேலும், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் வருகையால் கீப்பரான சஞ்சுவுக்கு பதில் தீபக் ஹூடாவுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.