தமிழ்நாடு

tamil nadu

பாடல்கள் மூலம் மகிழ்விக்க எஸ்பிபி மீண்டும் வருவார் - மெகா ஸ்டார் சிரஞ்சீவி

By

Published : Aug 20, 2020, 3:42 AM IST

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கரோனா தொற்றில் இருந்து மீண்டு பாடல்கள் மூலம் நம்மை மகிழ்விக்க வருவார் என நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவி
சிரஞ்சீவி

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி, கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவர் மீண்டும் உடல் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று திரை பிரபலங்கள் தங்களது பிரார்த்தனைகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, "கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்றவர், தேசமே பெருமைப்படும் அற்புதமான கலைஞர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். என் சகோதரர் சிகிச்சையில் முன்னேறி வருகிறார் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விஷயத்தை உங்களிடமும் பகிர்கிறேன்.

திரைப்படங்களை தாண்டி எஸ்பிபி அவரது குடும்பத்தினருடன் எனக்கு தனிப்பட்ட முறையில் பந்தம் உள்ளது. சென்னையில் நாங்கள் பக்கத்து தெருவில் வசிக்கிறோம். நான் அவரை அண்ணா என்று தான் அழைப்பேன். பாலு நாளுக்கு நாள் நன்றாக தேறி வருவது என் மனதிற்கு அமைதியை தருகிறது. அவர் மீண்டும் வரவேண்டும், பாடல்கள் மூலம் மகிழ்விக்க வேண்டும்.

கோடிக்கணக்கான அவரது ரசிகர்களுடன் நானும் இறைவனை வேண்டுகிறேன். நம் அனைவரின் பிரார்த்தனைகளும் இறைவனின் ஆசியும் அவரை விரைவில் குணமடைய செய்யும். அவருக்காக நாம் அனைவரும் இறைவனிடம் சேர்ந்து பிரார்த்திப்போம்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details