தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தற்போது ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்குப் பின் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதியப்படத்திற்கான அறிவிப்புகள் குறித்து அடுத்தடுத்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தெலுங்கு முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கொரட்டலா சிவா இயக்கும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து 'கே.ஜி.எஃப்' பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்திலும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளான நேற்று (மே 20) வெளியானது. இதுகுறித்து பிரஷாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில், " நாம் நினைவில் கொள்ளத் தகுதியான மண் இருந்தால் அது ரத்தம் தோய்ந்த மண் தான். வலிமை மிக்க ஒரே நபரான ஜூனியர் என்.டி.ஆரின் 31ஆவது படத்தை இயக்க காத்திருக்கிறேன். பாதுகாப்பான பிறந்தநாளாக இது அமைய வேண்டும் என்று உங்களை வாழ்த்துகிறேன் சகோதரா. மைத்ரீ மூவி மேக்கர்ஸுடன் வெற்றிகரமான கூட்டணியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்'' எனப் பதிவிட்டு பிரஷாந்த் நீல் ஜூனியர் என்.டி.ஆருடன் சேர்ந்து இருந்த புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
பிரஷாந்த் நீல் தற்போது பிரபாஸை வைத்து 'சலார்' என்னும் புதியப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் 'கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம்' வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.