சென்னை: நடிகர் கமல்ஹாசனைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் ஜிப்ஸி படத்துக்குப் பாராட்டு தெரிவித்திருப்பதுடன், மக்களே இந்த வெற்றிப்படத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஜிப்ஸி படத்தைப் பாராட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தான் சொல்லவந்த அரசியல் கருத்தை இயக்குநர் ராஜுமுருகன் போலி எதுவும் பூசாமல், சினிமாவின் நேர்த்தியோடு கதையைத் திரையில் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
இன்றைய இந்திய மக்களின் தார்மீக பிரச்னைகள் நீதியின்படியும், அறத்தின்படியும் கூறப்பட்டுள்ளது.
படத்தின் கதாநாயகன் ஜீவா இயல்பான ஹீரோவாக நடிப்பில் உயர்ந்திருக்கிறார். தனிநபர் விருப்பு-வெறுப்புகளைப் புறந்தள்ளி இத்தருணத்தில் பொதுமக்கள் இந்தப் படத்தை தங்களுக்கான திரைப்படமாக நினைத்து திரையரங்கை நிறைத்திட வேண்டும். மக்களே இந்த வெற்றிப்படத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
காதல் கலந்த பயணக் கதையான ஜிப்ஸி படம் கடந்தவாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமகால அரசியல் நிகழ்வுகளை தோலுரிக்கும்விதமாகவும், நய்யாண்டி செய்யும்விதமாகவும் படத்தில் காட்சிகள் இடம்பிடித்துள்ளன.
இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் பாராட்டிவரும் நிலையில், கருத்துமிக்க படங்களைத் தமிழ் சினிமாவுக்கு அளித்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனும் பாராட்டியுள்ளார்.
தற்போது இவர் உணவு அரசியலை மையமாக வைத்து லாபம் என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.