தமிழ்நாடு

tamil nadu

முரளிதரன் ஒரு இனத்துரோகி, 800 படத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் - பாரதிராஜா கடிதம்

By

Published : Oct 15, 2020, 1:54 PM IST

சென்னை: எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள் என்று விஜய் சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.

bharathiraja
bharathiraja

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு வலுத்துவருகிறது. முன்னதாக, தோழர் தியாகு, திரைப்பட கவிஞர் தாமரை ஆகியோர் விஜய் சேதுபதிக்கு கண்டன கடிதம் எழுதியுள்ளனர். தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன், அப்படம் வந்தால் திரையை கிழித்தெறிவோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விஜய் சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர். விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்? எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளிதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான்.

முத்தையா முரளிதரன் ஒரு இனத்துரோகி

அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே. என கேட்கின்றனர். அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன்.

இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலம் காலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா? எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள்.

தமிழ் மக்களின் சொத்து

பின் குறிப்பு: 800 திரைப்படத்தை எடுக்க இருக்கும் டார் மீடியா (Dar media) நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டதை அறிந்தேன். இந்த திரைப்படம் எடுத்தால் பல ஈழத்தமிழர் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமை உலக அரங்கில் வெளிக்காட்ட அடித்தளமாக இருக்கும் என்று வெளியிட்டுருந்தீர்கள். துரோகிக்கு துணை போகும் உங்களை நினைத்து கோபப்படுவதா? இல்லை உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பதா?

ஒரு செய்தியை அழுத்தமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் முத்தையா முரளிதரன் சிறந்த விளையாட்டு வீரனாக கருதலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் இனத் துரோகி. துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது.

பிரபாகரன் படத்தில் நடிக்க வேண்டும்

உண்மையிலேயே நீங்கள் தமிழர்களின் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமையை பயன் படுத்திக் கொள்ள விரும்பினால். அகிம்சை வழியில் போராடி தீயாக இன்றும் சுடர் விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு, அல்லது எங்கள் மக்களுக்காக தன்னையே உயிராயுதமாக உருக்கி எம் மண்ணோடு , காற்றோடு, கலந்து போன பல்லாயிரக்கணக்கான போராளிகளில், ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை, உலகரங்கில் எடுக்க முன் வா... ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாக பணியாற்றக் காத்திருக்கோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் - விஜய் சேதுபதிக்கு தாமரை கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details